திருவனந்தபுரம், டிச.27- தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 10 லாரிகளில் அத்தியாவசியப் பொருட் களை கேரளம் வழங்கியுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின்படி பொருட்கள் சேகரிக்கப்பட்டு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் ஒப்படைக்கப்பட்டன. உணவுப் பொருட்கள், அன்றாட பயன்பாட்டுக்கான பாத்திரங்கள், உடைகள் போன்றவை வழங்கப்பட்டன. பானை, அடுப்பு, தீப்பெட்டி, ஸ்டீல் தட்டுகள், கண்ணாடிகள், தோசை திருப்பி, கரண்டி, அலுமினிய பாத்திரங்கள், கத்தி உள்ளிட்ட 1000 பாத்திர கிட்டுகள் செவ்வாயன்று (டிச.26) அனுப்பி வைக்கப்பட்டன. என்ஜிஓ யூனியன், சிஐடியு, பல்வேறு பஞ்சாயத்துகள், தமிழ் அமைப்புகள், லயன்ஸ், ரோட்டரி சங்கங்கள், தலைநகரின் மிகப்பெரிய சந்தையான சாலையில் உள்ள வணிகர்கள், தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்டோர் பங்களித்தனர். கேரள நீர் ஆணையமும் 20 ஆயிரம் லிட்டர் குடிநீரை வழங்கியுள்ளது. குடிநீர் விநியோக அமைப்புகளை சீரமைக்க நீர் ஆணையம் நிபுணர் குழுவையும் அனுப்பியுள்ளது. செவ்வாய்க்கிழமையுடன் பொதுவான பொருட்கள் சேகரிப்பு முடிவடைந்ததாக கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.