கோவையில் ஜூலை 7-முதலாம் மாநில மாநாடு
புதுக்கோட்டை, ஏப்.27 - சுகாதார போக்குவரத்துத் துறை ஓய்வூதியர் நலச் சங்கத்தின் மாநில முதல் மாநாடு, கோவையில் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்றவர்களின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம், ஏப்.25 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ப.பிரதீப்குமார் தலைமை வகித்தார். மாதேஸ்வரன் வரவேற்றார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மு.முத்தையா வாழ்த்திப் பேசினார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் சுகாதாரப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை ஒருங்கிணைத்து ‘தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்துத் துறை ஓய்வூதியர் நலச்சங்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவது என முடிவு எடுக்கப்பட்டது. மேலும், 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்துத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும். பழைய ஓய்வூதிய முறையை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சங்கத்தின் முதல் மாநில மாநாட்டை கோவையில் ஜூலை 7 ஆம் தேதி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு, மாநாட்டை நடத்துவதற்கான குழு தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, மாநில அமைப்பாளராக சோ.நடராஜன், நிதிக் காப்பாளராக கி.நாகராஜன் (புதுக்கோட்டை), இணை அமைப்பாளர்களாக என்.ராமசாமி (சென்னை), கே.அருணகிரி (கோவை), சுப்பிரமணியன் (திருச்சி), வெங்கடாஜலம் (சேலம்), எம்.ஈஸ்வரமூர்த்தி (திருநெல்வேலி), எஸ்.பெருமாள் (மதுரை), ஜி.ராஜேந்திரன் (விழுப்புரம்), எஸ்.பாலகுரு (விருதுநகர்), வேலப்பன் ஆசாரி (நாகர்கோவில்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சோ.நடராஜன் நன்றி கூறினார்.