tamilnadu

img

‘வெளிநாட்டில் பதிவான வழக்கால் அவமானம்’ அதானி மீது ஊழல் வழக்கு பதிவு செய்க!

புதுதில்லி, நவ. 21 - ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கவுதம் அதானி மற்றும் அவரது குழுமத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது ஊழல் வழக்குப் பதிவு  செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: ரூ. 2,029 கோடி லஞ்சம் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் அதானி குழுமத்தைச் சேர்ந்த ஆறு பேர் இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில அளவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக, மின் விநியோக நிறுவனங்களிடமிருந்து மின் விற்பனை ஒப்பந்தங்களை செயல்படுத்துவ தற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் 2,029 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. அதானி குழுமத்தினரால் அமெரிக்க முதலீட்டாளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்களில், சாகர் அதானியிடமிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சம் மற்றும் உறுதிமொழிகள் குறித்த விவரங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டிருக் கின்றன.  மேலும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம்  வழங்கப்பட்ட மாநிலம் அல்லது பிராந்தியம், வழங்கப்பட்ட லஞ்சத்தின் தோராயமான தொகை, அதற்கு ஈடாக வாங்க ஒப்புக்கொள்ளும் சூரிய சக்தியின் தோராயமான அளவு ஆகியவையும் அதில் இடம் பெற்றுள்ளன.  பெரும்பாலானவற்றில் ஒவ்வொரு மெகாவாட்டிற்கும் அளிக்கப்படும் லஞ்சத் தொகை கூட குறிப்பிடப்பட்டிருக்கின்றன. லஞ்சம் பெற்ற அதிகாரிகளுடைய பெயர்களின் சுருக்கம் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும், பிராந்தியத்திலும் அளிக்கப்பட்ட மொத்த லஞ்சத் தொகையும் கூறப்பட்டிருக்கின்றன.

வெட்கக்கேடான சம்பவம்

அதானி கும்பலால் இவ்வளவு பெரிய அள விற்கு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப் பட்டிருப்பது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள குற்றவியல் நீதி பரிபாலன அமைப்பு மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு  தொடுக்கப்பட்டிருக்கிறது என்பது வெட்கக் கேடாகும். கவுதம் அதானி மற்றும் அவரது தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சட்டவிரோத மற்றும் கிரிமினல் செயல்கள் மோடி அரசாங்கத்தின் முழுப் பாதுகாப்பையும் பெற்றிருக்கின்றன. பிரதமர் மோடியே, அதானியை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் அவரைப் பாதுகாத்து வந்தார்.

இனியும் ஒளிய முடியாது

இனியும் மோடி அரசாங்கம் ஒளிந்துகொள்ள முடியாது. அமெரிக்காவில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வழக்கின் ஆதாரங்களின் அடிப்படை யில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்கு (சிபிஐ-க்கு) உத்தரவிட வேண்டும். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் என்பதால், இது மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தால் விசாரணை செய்யப்பட வேண்டும். அதானி குழும நிறுவனங்களின் இதர  தவறுகளையும் வெளிக்கொணர சுதந்திரமான புலன் விசாரணை முகமை ஒன்றின் மூலம் முழு அளவிலான புலன் விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.  (ந.நி.)