சென்னை நகர பரபரப்பு வாழ்க்கை முறையில் இருந்து சற்று ஓய்வெடுக்க நினைக்கும் குடும்பங்கள் டிசம்பர் முதல் மார்ச் வரை சுற்றுலா செல்வது வழக்கம். அப்படி செல்வதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று பழவேற்காடு. தமிழ்நாட்டில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை எதிர்பார்ப்பை காட்டிலும் அதிகமாக பெய்துள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதமான தட்பவெப்ப சூழல் நிலவுகிறது. தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான பறவைகள் சுற்றுலா தலங்களில் புலிகாட் என்று அழைக்கப்படும் பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் புலம் பெயர்ந்து வருகின்றன. இதனால் பறவைப் பிரியர்களை வெகுவாக கவர்ந்து வரும் இந்த ஏரி, ஆந்திராவின் நெல்லூர்,சித்தூர் மாவட்டங்களிலும்-தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்ட எல்லையிலுமாக சுமார் 481 சதுர கி.மீ. பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது. கடல், உப்பங்கழி, சதுப்பு நிலம் என வித்தியாசமான சூழலையும் கொண்டுள்ள இந்த ஏரிக்கு, தென் முனையில் ஆரணி, வடமேற்கில் காலங்கி, வடக்கு முனையில் சுவர்ணமுகி அணைகளில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது. இவை மூன்றும் ஒன்று கூடுவதால் விரிந்த பரப்பளவில் இயற்கை அழகுடன் ரம்மியமாக உள்ளது.
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம், தடா வழியாக சுமார் 80 கிலோ மீட்டர் தூரப் பயணத்தில் ஆந்திராவில் சூலூர் பேட்டையை அடைந்ததும் ஸ்ரீஹரிகோட்டா இணைப்புச் சாலையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இந்த சாலையின் இருபுறமும் கடல் போல் காட்சி அளிக்கும் பரந்த நீர்ப் பரப்பில் நீர்வாழ் பறவைகள் காண முடியும். சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பறவைகள் சரணாலயத்தின் நுழைவு வாயில் அமைந்துள்ளது. அங்கு உள்ளே சென்றதும் வாடகைப் படகு சவாரிக்கு கிடைக்கிறது. சென்னையில் இருந்து பொன்னேரி நகரின் வழியாகவும் பழவேற்காடு செல்லலாம். அங்குள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்தும் படகு சவாரி மூலம் சரணாலயத்துக்கு பயணிக்கலாம். குறைந்தது அரை மணி நேரம் முதல் அதிகபட்சம் மூன்று மணி நேரம் வரை படகில் பயணம் தொடரலாம். இதயங்களை வருடும் பறவைகள் புலிகாட் ஏரியின் சதுப்பு நில பகுதியில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வலசை வரும் வெளிநாட்டு பறவைகளுக்கும் இறை தேட தோதுவாக இருப்பதால் இதை வசிப்பிடமாகக் கொண்டுள்ளன. ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளதால் தற்போது சைபீரியா, ஆப்கானிஸ்தான், மங்கோலியா என பல்வேறு நாடுகளில் இருந்து கால்கள் நீளமாகவும், கழுத்தும் கால் போன்றே நீளமாகவும் இளஞ்சிவப்பு, உள்ளிட்ட வண்ணமயமான பல வகையான நீர்ப்பறவைகள் ஏராளமாகக் குவிந்துள்ளன. படகு சவாரி முடிந்ததும் பழவேற்காடு அருகில் உள்ள மீனவக் கிராமங்களுக்கு சென்று வரலாம். கலங்கரை விளக்கு, பழங்கால டச்சு கட்டடங்களின் கட்டமைப்பு, கோயில், தேவாலயம் என்று பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. பரபரப்பான வாழ்க்கை முறையில் இருந்து சற்று ஓய்வெடுக்க நினைக்கும் குடும்பங்களுக்கு இது முக்கிய சுற்றுலா தலமாகும். ஆனால், மிக்ஜம் புயலின் தாக்கத்திற்கு பிறகு இன்னும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவில்லை. அத்துடன் பழங்கால டச்சு கல்லறை உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களின் பராமரிப்பு முற்றுமாக கைவிடப்பட்டுள்ளது. மறுபக்கத்தில், பழவேற்காடு மார்க்கெட் சாலை, மீன்பிடி தளம், கலங்கரை விளக்கு செல்லும் சாலைகளில் பயணிக்கும் பொழுது பாதுகாப்பு கேள்விக் குறியாக மாறியிருக்கிறது. சமூக விரோதக் கும்பலின் நடமாட்டத்தால் பெண்கள் மட்டுமல்ல, ஆண்கள் மத்தியிலும் அச்ச உணர்வு ஏற்படுகிறது. இவை சரி செய்யப்பட்டால் பழவேற்காடு தனது பெருமையை நிலைநாட்டும்.