tamilnadu

img

பாத்திமா ஷேக்: முதல் முஸ்லிம் பெண் ஆசிரியர்

-சுடர் ஒளி

ஹிஜாப் சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க 2022 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் ஒன்பதாம் நாள் இணையத்தேடுதல் இயந்திரமான ‘கூகுள்’ ‘பாத்திமா ஷேக்’ என்ற முக்காடு அணிந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் ‘டூடுல்’ வெளியிட்டு அவரது 191ஆவது பிறந்த நாளில் அவரை கௌரவித்தது.  யார் இந்த பாத்திமா ஷேக்? எதற்காக பன்னாட்டு நிறுவனம் அவருக்கு மரியாதை செலுத்துகிறது கொஞ்சம் பின்னோக்கிச் சென்று பிரிட்டிஷ் ஆண்ட இந்தியாவின் வரலாற்றை பார்ப்போமாயின் இவர்தான் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியை என்பது தெரியவருகிறது. நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என்று போற்றப்பட்ட சாவித்திரி பாய் பூலேயுடன்  சேர்ந்து அவரது பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாடம் நடத்தியவர் இவர்.  சாவித்திரிபாய் பூலேவே ஒரு மறைக்கப்பட்ட வரலாறாகத்தான் இருந்தார். இந்திய வரலாற்று ஆசிரியர்கள் இவ்வளவு கொடூரமானவர்களா? பெண் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய இரு பெண்களை எந்த இடத்திலும் குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்துள்ளனர். சமூக சீர்திருத்தவாதிகள்  பற்றிய வரலாற்று பாடங்களில் இவர்களது பக்கங்கள் இடம்பெறாமலேயே இருந்து வந்தது. ஆனால் சாவித்திரிபாயின் பிறந்தநாளான ஜனவரி 3 ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி,

வாழ்த்துச் செய்தி வெளியிடும் அளவிற்கு வெகுஜன நாயகியாக ஏற்றுக்கொள்ள பட்டுவிட்டார் சாவித்திரி பாய் பூலே. ஆனால் பேசுவதற்கு கூட ஆளற்றவராக இன்றும் வரலாற்றில் தனக்கான உரிய இடத்தை பெற போராடிக் கொண்டே இருக்கிறார் பாத்திமா ஷேக்.  ஜாதிக் கட்டமைப்புகளை எதிர்த்துப் போராடிய மகாத்மா ஜோதிராவ் பூலே, பட்டியல் பிரிவினரை தன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதித்தார். பட்டியல் பிரிவு குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தர தன் மனைவி சாவித்திரி பாய் பூலேவை தயார் படுத்தினார். இதுவே அவர்கள் செய்த குற்றங்களாகும். அக்குற்றங்களுக்காக, ஜோதிராவும் அவரது மனைவி சாவித்திரிபாய் பூலேவும் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர். அப்போது தங்க இடமின்றி நிர்க்கதியாக நிற்கும் தம்பதியினருக்கு தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்கள் தான் பாத்திமா ஷேக்கும் அவரது அண்ணன் உஸ்மான் சேக்கும். இவர்கள் வீட்டில் தான் முதல் பெண்கள் பள்ளியும் துவங்கப்பட்டது பாத்திமா ஷேக் முதன் முதலில் சாவித்திரியை சந்தித்தது ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தான். சாவித்திரிபாய் படித்த அதே ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தான் பாத்திமா ஷேக்கும் பயிற்சி பெற்றார். இவரது அண்ணன் உஸ்மான் ஷேக் இவருக்கு பக்கத்துணையாக இருந்தார். உஸ்மான் ஷேக் ஃபாத்திமாவுக்கு மட்டும் பாதுகாப்பாக இல்லை சாவித்திரி பாய்க்கும் இவர் பாதுகாப்பாக இருந்துள்ளார்.

உஸ்மான் குஸ்தி பயிற்றுநர். அதனால் இவரிடம் அப்பகுதி மக்களுக்கு ஒரு பயம் இருந்தது. சாவித்திரிபாய் பூலே பள்ளிக்குச் செல்லும் வழியில் ஆதிக்க சக்தியினர் வழிமறித்து அவரிடம் தகராறு செய்த வேளையில் உஸ்மான் பாயும் அவரது குஸ்தி பள்ளியில் பயிலும் மாணவர்களும் சென்று அவர்களை விரட்டியுள்ளனர். அக்காலத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் பெண்களுக்கு கல்வி கற்றுத் தருவதால் அவமதிக்கப்பட்டார், சேற்றையும், மலத்தையும் வீசி அவமதித்தனர். சாவித்திரிபாய் பூலே என்றால் அவரோடு சேர்ந்து பணியாற்றிய பாத்திமா ஷேக்கிற்கும் அதேபோன்று குறைவில்லாமல் துன்பங்களையும், அவமதிப்புகளும் நடந்திருக்கும் தானே? சாவித்திரியை போலவே இவரும் பல அவமானங்களை சந்தித்தார்.  பாத்திமா ஷேக்கும், சாவித்திரிபாய் பூலேவும் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருந்தே தங்கள் கல்வி பயணத்தை ஒன்றாக தொடங்கினர். பெண்களாக இருந்து கல்வி கற்க வந்தது இவர்கள் இருவருக்குமே சவாலாக இருந்தாலும், பாத்திமா ஷேக்கிற்கு இது கூடுதல் சவாலாகவே இருந்தது. பாலினம், சாதி என்ற இரு சங்கிலிகளோடு மதம், சிறுபான்மையினர் என்ற சங்கிலிகளும் சேர்ந்து கூடுதல் சுமையாகவே இருந்தது பாத்திமாவிற்கு. ஜாதிய பாகுபாடுகளை சாதிக்குள் இருந்து மறுப்பது சிக்கல் என்றால் சாதிக்கு வெளியில் இருந்து அதை மறுப்பதும், எதிர்ப்பதும் பாத்திமா ஷேக்கிற்கு சவாலாகவே இருந்தது.

சாவித்திரி பாய்யும் அவரது கணவரும் முதல் பெண்கள் பள்ளிக்கூடம்  துவங்கியது பாத்திமா ஷேக்கின் வீட்டில் தான். அதன் பின்னர் அவர்கள் தொடங்கிய மற்ற ஐந்து பள்ளிகளிலுமே ஃபாத்திமா ஷேக்கும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அவர் ஆங்கிலேயரின் கல்விமுறையை முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் தலித் பெண்களுக்கு அறிமுகம் செய்தார். அவ்வாறு பெண்களுக்கும் கல்வி கற்பிப்பதற்கு  அவரது முஸ்லிம் சமூகத்தில் இருந்தே பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. கல்வி தவிர  ஜாதி எதிர்ப்பு போராட்டங்களிலும் ஜோதிராவோடு சேர்ந்து பணியாற்றியுள்ளார் பாத்திமா ஷேக்.  அவரைப் பற்றி, மகாராஷ்டிரா உருது மொழி பள்ளிக்கூட பாடப் புத்தகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  அன்றைய வரலாற்று ஆசிரியர்கள் பிழை செய்து இருக்கலாம் ஆனால் இப்போது அப்பிழை திருத்தப்படுகிறது, சிறுபான்மை சமூகத்தில் பிறந்து பெரும்பான்மையினரோடு சேர்த்து தாழ்த்தப்பட்டோரையும் உயர்த்த கல்வி என்னும் பேராயுதம் ஏந்திய பாத்திமா ஷேக்கை இந்திய பெண்கள் நன்றியோடு நினைவு கூர்வோம்.