புதுக்கோட்டை, பிப்.7 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பிப்வரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டையொட்டு பிப்ரவரி 4 அன்று பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இனாம் நிலமீட்புப் போராட்டத்தில் களப்பலியான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகி அடைக்கப்பனின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர். 1967 கால கட்டத்தில் இனாம் நிலப்போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் தீவிரமடைந்து இருந்த நேரம். திருமயம் தாலுகா ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட செம்புரான்வயல் கிராமம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.உமாநாத் வழிகாட்டுதலின் பேரில் திருமயம் தாலுகாவில் இனாம் நிலம் மீட்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற கற்பகம் மகன் அடைக்கப்பன், பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளராக இருந்த அடைக்கப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இப்போராட்டத்தில் தனது 33-ஆவது வயதில் கற்பகம் மகன் அடைக்கப்பன் ஈட்டியாலும், அரிவாளாலும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி இன்றும் தனது 85-ஆவது வயதில் மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். தியாகி அடைக்கப்பனின் மனைவி ஏகாம்பாள், சிபிஎம் கிளைச் செயலாளராக இருந்த அடைக்கப்பன், அவரது சகோதரர் சின்னக்கருப்பன் ஆகியோரை விவசாயத் தொழிலாளர் சங்க மாநில மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கவுரவித்தார். இந்நிகழ்வில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளர் பி.வெங்கட் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தியாகி அடைக்கப்பன்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பிறகு முதல் களப்பலியான தியாகி என்பதால் இந்நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சியாக அமைந்தது.