மதுரை, மே 22- விதிகளை மீறி முறை கேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த அந்தோணிமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.அந்த மனுவில், நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்குளம் பகுதியில் பொறுப்பு வகித்த, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரம் நபர்களின் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை, வாக்காளர்களுக்கான பூத் சிலிப் முழுமையாக வழங்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, தேர்தல் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணிக்காக சென்ற வாகனங்களுக்கு டீசல் போட்ட வகையில்போலி பில்களை அதிகமாக இணைத்துள்ளனர். வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நாட்களைவிட அதிகநாட்கள் பயன்படுத்திய தாக வாடகை கணக்கு காட்டப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி மையங்களுக்கு மேசை, நாற்காலி வாங்கியது, ஜெனரேட்டர் பயன்பாடு, சக்கர நாற்காலி வாங்கியது, உள்ளிட்ட பல்வேறு வகைகளில் போலியாக கணக்கு காண்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், வாகன தணிக்கையில் பிடிபட்ட பணம், பொருட்களையும் முறையாக பறிமுதல் செய்தவரிடம் ஒப்படைக்காமல் முறைகேடு செய்துள்ளனர். எனவே, தேர்தல் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட கல்குளம் தாசில்தார், உதவி தேர்தல் அதிகாரி, தேர்தல் பிரிவு எழுத்தர், பறக்கும் படை அதிகாரி ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. மனுதாரரின் புகார் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விசாரித்து 12 வாரங்களில் அது தொடர்பான அறிக்கையை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.