சென்னை,பிப்.25- சென்னையிலிருந்து மதுரை வழியாக செல்லும் ரயில்கள் ரத்து மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை-திருப்பரங்குன்றம்-திருமங்கலம் ரயில் வழித்தடத்தில் இரட்டை வழிப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மார்ச் 1 முதல் பல்வேறு தேதிகளில் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் (வண்டி எண்: 12605), மதுரை செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22623), மார்ச் 3 ஆம் தேதியும், நாகர்கோவில் வாராந்திர ரயில் (வண்டி எண்: 12667) மார்ச் 2 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து மதுரை செல்லும் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 20601) மார்ச் 1, 3 தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூருக்கு மதுரையிலிருந்து செல்லும் அதி விரைவு ரயில் (வண்டி எண்: 22624) மார்ச் 2 ஆம் தேதியும், காரைக்குடியிலிருந்து செல்லும் பல்லவன் ரயில் (வண்டி எண்: 12606) மார்ச் 1, 3, 4 தேதிகளிலும், நாகர்கோவிலிலிருந்து செல்லும் ரயில் (வண்டி எண்: 12668) மார்ச் 3 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-தாம்பரம் இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் (வண்டி எண்: 22657, 22658) மார்ச் 1,2 ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. பெங்களூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (வண்டி எண்: 17235, 17236) மார்ச் 1 முதல் 3 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தேஜஸ் விரைவு ரயில் மார்ச் 1,3,4,5 ஆகிய தேதிகளில் திருச்சி-மதுரை இடையேயும், வைகை மற்றும் பாண்டியன் விரைவு ரயில்கள் மார்ச் 1, 2, 3 தேதிகளில் மதுரை- கூடல்நகர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடல் நகரிலிருந்து இந்த ரயில் புறப்படும். சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் விரைவு ரயில் வருகிற 28 ஆம் தேதி முதல் மார்ச் 3 வரை திருச்செந்தூர்- திருச்சி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி- தாதர் விரைவு ரயில் மார்ச் 2, 3 ஆம் தேதிகளில் சேலத்திலிருந்தும், தூத்துக்குடி-மைசூர் ரயில் மார்ச் 1, 2 ஆம் தேதிகளில் திண்டுக்கல்லில் இருந்தும் புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.