நாட்டு வெடி தயார் செய்யும் குடோனில் வெடிவிபத்து!
பெண் உடல் சிதறி உயிரிழப்பு
சிதம்பரம், ஜூன் 15- கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியகுமட்டி பகுதியில் நாட்டு வெடி தயார் செய்யும் குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமட்டி பகுதியில் பி. முட்லூர் நாகவல்லி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன்(55) என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயார் செய்யும் குடோன் உள்ளது. அரசு உரிமம் பெற்று அவர், நாட்டு வெடி தயார் செய்து, விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் ஞாயிறன்று (ஜூன்15) பி. முட்லூர் நாகவல்லி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி வண்ணன் மனைவி லதா (37) என்பவர் குடோன் அருகே சிறிய அளவிலான கந்தகம் வைத்திருந்த ஓட்டுக் கொட்டகையில் வெடி தயார் செய்யும் பணியில் இருந்துள்ள தாக கூறப்படுகிறது. அப்போது ஞாயிறன்று பகல் 11.30 மணி அளவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த கொட்டகை தரை மட்டமானது. இதில் லதா உடல் சிதறி உயிரி ழந்தார். இது குறித்து தகவலறிந்த பரங்கிப்பேட்டை காவல்துறையினர் சம்பவஇடத்துக்கு சென்று லதாவின் சிதறிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த லதா குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிபிஎம் தலைவர்கள் ஆய்வு சிதம்பரம் அருகே பெரிய குமட்டி கிராமத்தில் வெடி விபத்து ஏற்பட்ட இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கட்சியினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயிரிழந்த லதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.