பிளாஸ்டிக் கழிவுகளால் உயிரிழந்த யானை
உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்கள்!
கோவை, மே 21 – கோவை மருதமலை வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானையின் உடற்கூறாய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நுண்ணுயிர் தொற்று காரணமாகவே யானை உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், யானையின் கருப்பையில் 15 மாத ஆண் குட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மருதமலை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானைக்கு கடந்த நான்கு நாட்களாக கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். யானையின் உடல் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. யானையின் கருப்பையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சிசு சென்னை வண்டலூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட வன உயிரின ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டது. உடற்கூறாய்வுக்குப் பிறகு பெண் யானையின் உடல் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
உடற் கூறாய்வு அறிக்கை வெளியீடு
இது குறித்துப் பேசிய கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், இறந்த பெண் யானைக்கு சுமார் 17 முதல் 18 வயது இருக்கலாம் எனக் கூறினார். யானைக்கு இருதய பாதிப்பு கண்டறியப்பட்டதுடன், அதன் காரணமாக கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இது கல்லீரல் பாதிப்பிற்கான அறிகுறிகள் என்றும், சிறுநீரகத்தில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். யானையின் வயிற்றில் உணவு ஏதும் இல்லாமல் காலியாக இருந்தது. செவ்வாயன்று வழங்கப்பட்ட பழங்கள் மட்டுமே காணப்பட்டன. சிறுகுடலில் சரியாக ஜீரணமாகாத பழங்களும், பெருங்குடலில் ஜீரணமான சாணத்துடன் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அலுமினிய பாயில்கள் கண்டறியப்பட்டுள்ளன. யானையின் கர்ப்பப்பையில் சுமார் 12 முதல் 15 மாதங்கள் ஆன ஆண் சிசு இருந்தது தெரியவந்தது. உடலில் வேறு காயங்கள் ஏதும் இல்லை. பெண் காட்டு யானை உயிரிழப்பிற்கான முக்கிய காரணம் நுண்ணுயிர் தொற்று தான். இந்தத் தொற்று காரணமாக கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகமாகி, இருதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகள் இழந்து யானை உயிரிழந்திருக்கலாம். இந்தத் தொற்று ஏற்படுவதற்கு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கெட்டுப்போன உணவுகள் காரணமாக இருக்கலாம் என்றார்.
குப்பைக் கிடங்கு மூடல்
கோவை மருதமலை வனப்பகுதி அருகே சோமையம்பாளையம் ஊராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இந்தக் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகளை வன விலங்குகள் உட்கொண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருந்தது. இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தும், வனத்துறையினர் ஊராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்ட பெண் காட்டு யானை உயிரிழந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சோமையம்பாளையம் ஊராட்சி குப்பைக் கிடங்கு உடனடியாக மூடப்பட்டது. அங்குள்ள குப்பைகள் கோவை மாநகராட்சியின் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு மாற்றப்பட்டு, தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இனிவரும் காலங்களில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகமே பெற்று தரம் பிரித்து அழிக்கவும், அதற்கான கட்டணத்தை ஊராட்சி நிர்வாகம் வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வன எல்லையில் இருந்த குப்பைக் கிடங்கு மூடப்பட்டது நீண்டகால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தெரிவித்தார். இனிவரும் காலங்களில் இங்கு குப்பைகள் கொட்டப்படாது என்றும், யானைகள் வராமல் தடுக்க வன ஊழியர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.