புதுச்சேரி,பிப்.3- புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் முடிவை எதிர்த்தும் மாநிலத்தில் ஆளும் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் மவுனத்தை கண்டித்தும் ஒட்டு மொத்த மின்துறை ஊழியர்களும் பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். மின்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுத் தலைவர் அருள்மொழி தலைமையில், போராட்டக்குழுவின் பொதுச் செயலாளர் வேல்முருகன், ஆலோசகர் ராமசாமி (சிஐடியு) உட்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். முதல் நாள் போராட்டத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் டி.ஜெய்சங்கர் பொதுச்செயலாயர் எஸ்.ராஜேந்திரன், ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், மூர்த்தி, சுப்பிரமணி, சேத்திலால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். மின் ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு அண்டை மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா மின்சாரவாரிய தொழிற் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மின் ஊழியர்களின் போராட்டத்தை ஆதரித்து புதுச்சேரி பிரதேசம் முழுவதும் காங்கிரஸ், திமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோரையும் சந்தித்து இப்பிரச்சனையில் அரசு உடனே தலையிட வலியுறுத்தினர். இதற்கிடையில், மின் ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டன.
முதல்வர் அழைப்பு!
இந்நிலையில், மின்துறை ஊழியர்களின் போராட்டக்குழுவினரை முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள கேபினட் அறையில் போராட்டக்குழுவினர் அருள்மொழி, வேல்முருகன், ராமசாமி மற்றும் மின்துறை அதிகாரிகள் ஆகியோரை அழைத்து மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மின்துறை தனியார்மயமாக்கப்படாது என்றும் மக்களிடமும் ஊழியர்களிடமும் கருத்துக்களை கேட்ட பிறகுதான் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரைக்கும் தற்போதைய நிலையே தொடர ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எனவே, போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தற்காலிகமாக தள்ளிவைப்பு
முதல்வரின் உறுதியை அடுத்து, போராட்டக்குழுவினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்த ஊழியர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர். போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து தங்களது முடிவை அறிவித்தனர். அவர்கள் கூறியதாவது:- மின்துறை ஊழியர்களின் போராட்டக் குழுவினரை அழைத்து முதல்வர் பேச்சுவார்ததை நடத்தினர். பேச்சுவர்த்தையில் மின்துறை தற்போதைய நிலை தொடரும் என்றும் மாநில மக்கள், ஊழியர்களின் கருத்துகளை கேட்காமல் அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று உறுதி அளித்துள்ளார். ஊழியர்களின் கருத்துகளை ஒன்றிய அரசிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். எனவே,முதல்வரின் உறுதியை ஏற்று காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம். மீண்டும் அரசு தனியார்மய நடவடிக்கையை தொடர்ந்தால் ஊழியர்களின் போராட்டமும் தொடரும் என்றார்கள். மின்துறை ஊழியர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைபொருட்படுத்தாத மின்துறை ஊழியர்களின் போராட்டமும், ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் எதிர்கட்சிகள், சிஐடியு, ஏஐடியூசி, ஐஎன்டியூசி தொழிற்சங்கங்களும், சமூக ஜனநாயக இயக்கங்கள், அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மிரண்டு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.