சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும் கூரிய ஆயுதம் கல்வி என்று மதுரை நாடாளுமன்ற உறிப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி கடந்த ஆண்டு செப்டமபர் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.
இந்த நிலையில், பிரபல நாளிதழ் ஒன்று முதல்வரின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். பிரபல நாளிதழுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும் கூரிய ஆயுதம் கல்வி என்று மதுரை நாடாளுமன்ற உறிப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"சூத்திரனுக்கு கல்வி தருவது புண்ணிலிருந்து வரும் சீழைக் குடிப்பதற்குச் சமம்... என்று அன்று கூறியவர்கள் அதே வன்மத்தோடு இன்றும்.
பசி நீக்கும் செயல் கழிவறையை நிரப்பும் செயலாக தினமலருக்குப் படுகிறது. சனாதனக் கருத்தியலின் பல்லைப்பிடுங்கும் கூரிய ஆயுதம் கல்வி. கற்போம். கற்பிப்போம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.