tamilnadu

img

கே.தங்கவேல் எனும் மாமனிதர்!

வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்பைக்கூட தாண்ட முடியாதவர். பின்னாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். அவர்தான், அனைவராலும் தோழர் கே.டி. என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் கே.தங்கவேல். இளம் வயதில் பனியன் தொழிலாளியாக தன் வாழ்க்கையை தொடங்கினார்.  1970களில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பனியன் தொழிலாளியாக தொழிற்சங்கத்தில் ஈடுபடத் தொடங்கி, அவரது தீவிரமான செயல்பாட்டின் காரணமாக பனியன் தொழிற்சங்கத்தின் நிர்வாகியாக உயர்ந்தார். சைக்கிளிலேயே திருப்பூர் வட்டாரம் முழுவதும் அதிகாலை நேரத்தில் சுற்றித்திரிந்து தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார். தொழிற் சங்கத்தின் மூலமாகவே அவற்றை தீர்க்கவும் முயற்சி மேற் கொண்டு தொழிலாளர்களை தொழிற்சங்க உறுப்பினர்களாக மாற்றினார். தொழிலாளர்களின் வாழ்வியல் பாடுகளை நேரில் கண்ணுற்றும்,

அவர்களோடு இரண்டறக் கலந்து பழகியும் அவர்களுக்கான கோரிக்கைகளை அவர் உள்வாங்கினார்.  1984 ஆம் ஆண்டு பஞ்சப்படி போராட்டம் நடத்தப்பட்டது. 127 நாட்கள் நீடித்து நடைபெற்ற அந்தப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றது. இன்றளவும் திருப்பூர் தொழிலாளர்கள் முத்தரப்பு சம்பள ஒப்பந்தத்தின் மூலம் பஞ்சப்படி உயர்வும் பெற்று வருகிறார்கள் என்பதற்கு 1984 போராட்டத்தின் வெற்றியே காரணமாகும். அந்தப் போராட்டத்தை தலைமையேற்று வழி நடத்திய குழுவில் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் தோழர் கே. தங்கவேல். இத்தகைய நடைமுறை போராட்ட அனுபவத்தின் மூலம் அவர் தொழிலாளர்களின் தலைவராக மட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் படிப்படியாக தலைமை பொறுப்புக்கு உயர்ந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்ட செயலாளராக, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக அவர் முன்னேறினார். 2011 முதல் 16ஆம் ஆண்டு வரை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய  மக்கள் பணிகள் அழுத்தமானவை, ஆழமானவை. எந்த படாடோபம், பந்தா இல்லாமல் செயல்பட்டார். 2011 ஆம் ஆண்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபோது, திருப்பூர் சாயப்பட்டறை தொழில் மூடப்பட்டு கடும் நெருக்கடி யை சந்தித்து வந்த தருணம். நெருக்கடியை தீர்த்து அந்த ஆலைகள் இயங்குவதற்கு அவர் மேற்கொண்ட பணிகள் மிக, மிக முக்கியமானவை.

அதே ஆண்டு நவம்பர் மாதம் ஜம்மனை, சங்கிலி பள்ளம் ஓடைகளில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம், நொய்யல் ஆற்று கரையோரம் வாழ்ந்த மக்களுக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அவரது பாதம் படாத வீடே இல்லை என்று சொல்லலாம். கட்சி, வர்க்க வெகுஜன அமைப்புகளை தாண்டி எண்ணற்ற சாமானிய மக்கள் முதல் மிகப்பெரும் கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ஏற்றுமதியாளர்கள் என அவரது தொடர்பு வட்டத்தில் பல்வேறு தரப்பினர் இருந்தனர். அவரைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் கூட்டம் இருக்கும். அனைவரிடமும் நிகழ் நேரத் தொடர்பில் இருந்தார் என்பது பலருக்கு அசாத்தியமானது. ஆனால் ஆச்சரியமான உண்மை. இத்தனைக்கும் மத்தியிலும் புத்தக வாசிப்பில் மிகப் பெரும் காதலர். குறிப்பிட்ட பொருள்களில் இருக்கும் புத்தகங்கள் என்று மட்டும் இல்லாமல் பரந்த வாசிப்பு கொண்டவர். பேச்சில் எப்போதும் மெல்லிய நகைச்சுவை கலந்து இருக்கும். அவரை நெருங்கும் பலரையும் காந்தம் போல் ஈர்க்கக் கூடியவர். நேர நிர்வாகம், மனிதவள மேம்பாடு, சமூக உறவு என பல விஷயங்களிலும் அவர் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார். ஒரு சிறந்த கம்யூனிஸ்டான தோழர் கே.தங்கவேல் ஓர் அற்புதமான மனிதர் ஆவார். அவர் செயல்பட்ட அதே வழியில் செங்கொடி இயக்கத்தின் பணியை தொடர்வோம்!

தோழர் கே. தங்கவேல் 3ஆம் ஆண்டு நினைவு தினம்