திருச்சியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சர்வதேச போதை ஒழிப்பு தினம்!
திருச்சிராப்பள்ளி, ஜுன் 26- திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழனன்று சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சரவணன், மாணவ, மாணவியர்களுடன் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதினாலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதினாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், போதைப் பழகத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சரவணன் வாசிக்க, அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இ தனைத் தொடர்ந்து நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமரவேல், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் உதய அருணா மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.