tamilnadu

குறைவாக ரேசன் பொருட்கள் விநியோகம்: கூட்டுறவு ஊழியர்கள் ஆட்சியரிடம் புகார்

நாகர்கோவில், மே.19-தமிழக அரசு , ரேஷன் கடைகளுக்குஅரிசி உள்ளிட்ட பொருட்களை முழுமையாக வழங்கவும், நுகர்பொருள்வாணிப கழகம் சரியான எடைக்குரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் மற்ற மாவட்டங்களை போலல்லாமல் 98 சதவிகிதத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைக்கான ரேஷன் பொருட்களை நியாயவிலை கடைகளில் வந்து பெற்றுக் கொள்கின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு 85 சதவிகிதம் ஒதுக்கீடு செய்து அரிசி வழங்குவதால் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரேஷன் அரிசி வழங்க இயலவில்லை. ஒவ்வொரு மாதமும் மாதகடைசியில் வரும் அட்டைகாரர் களுக்கு அரிசி வழங்க முடிவதில்லை.இதே போன்று சீனி, சமையல் எண்ணெய் போன்ற பொருட்களும் முழுமையாக அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொருட்கள் கிடைக்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கும் பலஇடங்களில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையான அளவு அரிசி வழங்கப்படுவதாகவும் ரேஷன் கடைக்காரர்கள்தான் அனைத்து அட்டைகளுக்கும் அரிசி வழங்குவதில்லை என்ற தவறான செய்தியை ஏதோ ஒரு அதிகாரி கூறியதாக பத்திரிகையில் வரப்பெற்றது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே தவறான செய்தியை வெளியிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று புதிதாக வரப்பெறும் குடும்ப அட்டைகள், கடை மாறி வரும்குடும்ப அட்டைகள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் போன்றவற்றிற்கு கூடுதலாக தேவை ஏற்படும் போது பழைய அளவிலேயே பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. எனவே 100 சதவிகிதம் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும் நுகர்பொருள் வாணிபகழகத்திலிருந்து நியாயவிலைக் கடைக்கு வழங்கப்படும் அரிசியும் பலநேரங்களில் மூடைக்கு 5 கிலோவிற்கும் மேற்பட்ட விகிதத்தில் குறைந்து வருகிறது. சரியான எடையில் வழங்க கிட்டங்கி அதிகாரிகளை நிர்பந்தித்தாலும் சரியான எடைக்கு வழங்கப்படுவதில்லை. மேல்மட்ட அதிகாரிகள் கிட்டங்கிகளில் ஆய்விற்கு வரும் நாளில் 1 அல்லது 2 கடைகளுக்கு மட்டுமே பொருட்கள் அனுப்பக்கூடிய வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே எடை குறைவில்லாமல் கிட்டங்கிகளிலிருந்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.