ஜிம்னாஸ்டிக் உலகில் புகழ்பெற்ற தீபா கர்மாகர், தொழில்முறை போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “ஜிம்னாஸ்டிக் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதியாகும். ஜிம்னாஸ்டிக் உடனான எனது தொடர்பு ஒருபோதும் விலகிச் செல்லாது. ஒவ்வொருவருக்கும் உயர்வு, தாழ்வு, ஏற்றம், இறக்கம் உண்டு. அது எனது வாழ்விலும் பிரதிபலித்தது. அத்தகைய தருணங்களில் எனது குடும்பம் என்னுடன் உறுதியாக நின்றது எனக்கு பெருமையாகும். நான் ஓய்வு பெறுகிறேன் என்று எழுதுகிறேன். ஆனால், ஜிம்னாஸ்டிக் விளையாட்டு உடனான எனது தொடர்பு ஒருபோதும் இழக்காது. நான் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், என்னைப் போன்ற மற்ற பெண்களுக்கும் வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் இந்த விளையாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புகிறேன். ஆனாலும், நீண்ட ஆலோசனைக்கு பிறகு, ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்று முடிவு செய்துள்ளேன். இது எளிதான முடிவு அல்ல. ஆனால் இதுவே சரியான நேரம் என்று உணர்கிறேன் என்று இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தனது சமூக வலைதளத்தில் “சைனிங் ஆப் தி மேட்ச்” என்ற தலைப்பில் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளார். ஆனாலும், எனது இதயம் கேட்கவில்லை. அதுதான் இப்போது நடந்து உள்ளது. எனவே, கடந்த 25 ஆண்டுகளாக என்னை வழிநடத்தி எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்து எனது வாழ்க்கையை வடிவமைத்த பயிற்சியாளர்கள் நந்தி, சோமா மற்றும் ஆதரவு கொடுத்த ரசிகர்கள் மாநில அரசு, ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு இந்திய விளையாட்டு ஆணையம் அனைவருக்கும் தனது ஓய்வு அறிவிப்பு கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
பிறப்பும்-இளமைக் காலமும்!
4 அடி 11 அங்கலம் உயரமே கொண்டவர் தீபா கர்மாகர். 31 வயதாகும் அவர், திரிபுரா மாநிலம், அகர்தலாவில் 9.8.1993 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆறு வயது முதல் விஸ்வேஸ்வர் நந்தி என்பவரிடம் பயிற்சிக்கு சென்றார். மிகக் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு பாதங்களை வளைவு பெற செய்தார். மேலும், இவரது திறமையை பார்த்து அசந்து போன ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பும் உதவியது.
சாதனையும்-விருதும்!
இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்ஸ் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் தீபா கர்மாகர். 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற திமிங்கலமான சீமோன் பைல்ஸ், மரியா பசேகா, கியுலியா ஆகியோருடன் பதக்கத்துக்கான போட்டியில் நூலிழையில் (0.015) புள்ளிகள் வித்தியாசத்தில் தவறவிட்ட போதிலும் மிகப்பெரிய சாதனையாளராக மாறினார். ஜிம்னாஸ்டிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற தீபா, 2015 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் 5ம் இடம் பிடித்தார். 2018 ஆம் ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். அதே போட்டியில் அடுத்த ஆண்டு வெண்கலம் வென்றார். 2021 ஆம் ஆண்டு ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். 2021 அக்டோபரில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் அவர் தோல்வியடைந்தார். 2018 ஆம் ஆண்டு துருக்கியின் மெர்சின் நகரில் நடைபெற்ற ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் வேர்ல்ட் சேலஞ்ச் கோப்பையின் வால்ட் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார். புராடு நோவா என்னும் ஆபத்தான அந்தரத்தில் இரண்டு குட்டி கரணங்கள் போட்டு கால் பதிக்கும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் இதுவரை வெற்றிகரமாக முடித்த ஐந்து பெண்களில் இவரும் ஒருவர். தனது 15 வயதிற்குள் 77 பதக்கங்களை வென்றுள்ளார் தீபா கர்மாகர். இதில் 67 தங்கப்பதக்கங்கள் அடங்கும். இவை அனைத்தும் இவருடைய தளராத முயற்சி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்ததாகும்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார். அதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெண்கலம் தட்டி வந்தார். ரியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் பதக்கத்தை தவறவிட்ட போதிலும் நான்காவது இடத்தைப் பிடித்த இவருக்கு, விளையாட்டுத் துறை உதவி இயக்குநர் பதவியை வழங்கி அன்றைய மாணிக் சர்க்கார் தலைமையிலான இடது முன்னணி திரிபுரா அரசு பெருமைப்படுத்தியது. இந்திய விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஒன்றிய அரசின் அர்ஜுனா விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார். இது மட்டுமின்றி, பத்மஸ்ரீ துரோணாச்சாரியார் விருதும் போர்பாசின் 30 வயதுக்குட்பட்ட ஆசியாவைச் சேர்ந்த சூப்பர் சாதனையாளர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார். விடாமுயற்சிகளின் மூலம் கடினமான விளையாட்டு பிரிவிலும் சாதிக்க இயலும் என்பதற்கு தீபிகா கர்மாகர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவரை போல தன்னம்பிக்கையுடன், கடின உழைப்பின் மூலம் வாழ்வில் அவரவர் துறையில் சாதனை செய்வோம்!