வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) தொடர்பான முக்கிய பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்துள்ள பதில்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. டிசம்பர் 16 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய ஐந்து முக்கிய கேள்விகளுக்கான பதில்கள் பொதுமக்களின் வைப்புத்தொகை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
பாதுகாப்பற்ற நிதி நிறுவனங்கள்
வைப்புத்தொகை காப்பீட்டு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் (DICGC) பாதுகாப்பு வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (NBFCs) இந்த பாதுகாப்பு கிடையாது என்பது தெளிவாகியுள்ளது. இது வைப்புதாரர்களின் பணத்துக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்பதை உணர்த்துகிறது.
உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்கள்
2024 ஜூன் 30 வரை 5,728 நிதி நிறுவனங்கள் மற்றும் சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களின் பதிவுச் சான்றிதழ்களை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. ஆனால் ரத்துக்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது வெறும் 25 நிறு வனங்கள் மட்டுமே வைப்புத்தொகை பெறும்வங்கியல்லாத நிதி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.
வசூல் முகவர்களின் துன்புறுத்தல்
வசூல் முகவர்களின் துன்புறுத்தல் குறித்த புகார்கள் மேற்பார்வை நிறுவனங்களுக்கு (SEs) அனுப்பப்படுவதாகவும், 2003-ல் வெளியிடப்பட்ட நியாயமான நடைமுறை விதிமுறைகள் இருப்பதாகவும் மட்டுமே அமைச்சர் பதிலளித்துள்ளார். பொதுமக்கள் இழந்த மொத்தப் பணம் குறித்த கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அவசர நடவடிக்கை கோரிக்கை NBFCs வைப்புத்தொகைகளுக்கு DICGC பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும், உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் முழு விவரங்களை வெளியிட வேண்டும், வைப்புதாரர்கள் இழந்த தொகையை கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும், வசூல் முகவர்களின் துன்புறுத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இல்லையேல் பொதுமக்களின் பணம் தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.