சென்னை, பிப். 20 - ‘டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்’ பெயரி லான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் டி.கே.ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டுள் ளார். பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன், சன்சத் ரத்னா விருதளிப்புக் குழு ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 13 ஆண்டுகளாக ‘சன்சத் ரத்னா’ விருதை (நாடாளு மன்ற ரத்தினம்) வழங்கி வருகின்றன. மக்களவை, மாநிலங்களவையில், அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி, அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆலோச னையின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு, விருது வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் நடுவர் குழுத் தலைவராகவும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைத் தலைவராகவும் செயல்பட்டு, தேர்வுக்குழுவினர் விருதாளர்களை தேர்வு செய்தனர். இதன்படி, மக்களவையிலிருந்து 8 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 5 உறுப்பினர்களும் ‘சன்சத் ரத்னா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், மக்க ளவை நிதித் துறை நிலைக்குழு மற்றும் மாநிலங்களவை போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பண்பாட்டு நிலைக்குழு ஆகியவையும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வாழ்நாள் சாதனையாளர் விருது
மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், பொது வாழ்வுப் பெருமகனாகவும், நீண்ட நெடும் ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றி வரும் பிரமுகருக்கு ‘ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது’ கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது கள் வழங்கும் விழா, மார்ச் 25ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது. நாடறிந்த தொழிற்சங்கத் தலைவரான டி.கே.ரங்கராஜன் (வயது 81), சர்க்கரை ஆலை யில் பணிக்கு சேர்ந்து, படிப்படியாக சிஐடியு-வின் மாநிலப் பொதுச் செயலாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் உயர்ந்தவர். அனைத்து கட்சியினருடனும் நட்புகொண்ட அவர், 2 முறை (12 ஆண்டுகள்) மாநிலங்களவை உறுப்பின ராக திறம்பட பணியாற்றியவர். நாடாளுமன்றத்திலும், அரசியலிலும் அருந்தொண்டாற்றியவராகவும், 80 வயதை கடந்தவராகவும் உள்ளார்.
வழிகாட்டி
நடைமுறை அரசியலில் இருந்து விலகி இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது என்று கூறிய பிரைம் பாயிண்ட் சீனிவாசன், “தொழிற்சங்கத்திலும், அரசியலிலும் அவரின் பங்களிப்பு மகத்தானது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் செயல்பட்டு வருகிறார். அரசியல் எல்லைகளை கடந்து அனைத்து கட்சியின ராலும் மதிக்கப்படக் கூடியவராக உள்ளார். நாடாளுமன்ற விவாதங்களின்போது, ஆளும் கட்சியில் இருப்பவர்கள் கூர்ந்து கவனிக்கும் வகையில், அவரது பேச்சு கருத்து செறிவுள்ளதாக இருக்கும். புன்படுத்தாத வகையில் விமர்சனங்களை பக்குவமாக எடுத்துரைப்பார். மேன்மையான அணுகு முறையில் பிரச்சனையை அணுகக் கூடியவர். மாற்றுக்கருத்து கொண்டிருந்தாலும், அவரது உரையை உறுப்பினர்கள் விரும்பி கேட்பதாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியாக உள்ளார். எனவே, இந்த விருதுக்கு அவரை தேர்வு செய்துள்ளோம்” என்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் வீரப்ப மொய்லியை தொடர்ந்து டி.கே.ரங்கராஜனுக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.