புதுதில்லி, ஏப். 20 - தில்லியில் இஸ்லாமியர்களின் வீடு களை பாஜகவின் தூண்டுதலின் பேரில் மாநகராட்சி நிர்வாகத்தினர் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தன்னந்தனியாளாகப் போராடி அந்தப் புல்டோசர்களை தடுத்து நிறுத்தி னார். வீடுகளை இடிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டும், அந்த உத்தரவை மதிக்காமல் 2 மணி நேரத்திற்கும் மேலாக இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன.
இந்நிலையில்தான், ஜஹாங்கீர் புரிக்கே நேரடியாக சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், தனது துணிச்சல் மிகுந்த போராட்டம் மூலம் வீடுகள் இடிப்பை தடுத்து நிறுத்தியுள்ளார். முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவை காட்டி, வீடுகளை இடிப்பதை நிறுத்துங்கள் என்று அதிகாரிகளுக்கு பிருந்தா காரத் கோரிக்கை விடுத்தார். ஆனால், பாஜக தலைமையிலுள்ள தில்லி வடக்கு மாநகராட்சி அதிகாரி களும், பொதுப்பணித்துறை அதிகாரி களும் அதனைக் கேட்பதாக இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவு நகல் தங் களுக்கு இன்னும் வந்துசேரவில்லை என்று கூறி, வீடுகளை இடிப்பதிலேயே தீவிரமாக இருந்தனர்.
இதனால் ஆவேசமடைந்த பிருந்தா காரத், புல்டோசர் முன்பாக நின்று, ‘தில்லி மாநகராட்சி நிர்வாகமே நீதி மன்றத் தீர்ப்பை மதித்து நட... வீடுகளை இடிக்காதே!’ என்று முழக்கமிட்டு, போராட்டத்தில் இறங்கினார். வீடுகளை இடிக்கும் பணிக்காக, 400க்கும் அதிகமான போலீசார், 1250 துணை ராணுவப் படையினர் ஜஹாங் கீர்புரி பகுதியில் குவிக்கப்பட்டு இருந்த னர். இதனால் அந்தப் பகுதியே பெரும் பரபரப்பிலும் பதற்றத்திலும் இருந்தது. எனினும், அவற்றையெல்லாம் மீறி தில்லி காவல்துறை அதிகாரிகளுடன் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிருந்தா காரத், வீடுகள் இடிப்பை நிறுத்தாமல் விட மாட்டேன் என்று புல்டோசர் செல்லும் இடங் களுக்கு எல்லாம் முன்னால் சென்று மறித்தார். வீடுகளை இடிக்கவிடாமல் பெரும் போராட்டத்தை நடத்தினார். இதனால், மாநகராட்சி அதிகாரிகளால் தொடர்ந்து வீடுகளை இடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தலைமை நீதிபதி உத்தரவு
இதனிடையே, தாங்கள் உத்தரவிட்ட பின்னரும், ஜஹாங்கீர் புரி பகுதியில் வீடுகள் இடிக்கப்படுவதும், அங்கு சிபிஎம் தலைவர் பிருந்தா காரத் நடத்தி வரும் போராட்டமும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் கவனத்திற்குச் சென்றது. இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட அவர், உச்ச நீதிமன்ற உத்தரவு உடனடியாக தில்லி மாநக ராட்சியிடம் கொடுக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத் தடை உடனே அமலுக்கு வர வேண்டும் என்று பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ஜஹாங்கீர் புரி பகுதியில் வீடுகளை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. முன்னதாக ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, அவசர மனுத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றமும் அதனை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது, “வடக்கு தில்லி மாநக ராட்சி நிர்வாகமும், பொதுப்பணித் துறை யும் இணைந்து, முற்றிலும் அங்கீகரிக் கப்படாத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான இடிப்புக்கு உத்தரவிட்டுள்ளன; செவ்வாயன்று நோட்டீஸ் கொடுத்துவிட்டு மறுநாளே வீடுகளை இடிக்க வந்துள்ளது. பலருக்கு நோட்டீசும் வழங்கப்படவில்லை. புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கவிருந்த இடிப்பு காலை 9 மணிக்கே தொடங்கியுள்ளது” என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே குற்றம்சாட்டினார். மூத்த வழக்கறி ஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷண் ஆகியோரும் ஆஜராகினர். இதையடுத்து, தில்லி ஜஹாங்கீா் புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் கூறியது. ஆனால், அதையும் மீறித்தான் 2 மணிநேரத்திற்கும் மேலாக பாஜக தலைமையிலான தில்லி மாநகராட்சி இடிப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டது.