ஹைதராபாத், ஜன.30- மனுவாத சித்தாந்தத்திற்கு எதிராகப் பல்வேறு கலைவடிவங்களில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநில மாநாடு முடிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநில 3ஆவது மாநாடு, ரங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்க்யாம்ஜல் என்னுமிடத்தில் ஜனவரி 22-25 தேதிகளில் எழுச்சியுடன் நடை பெற்றது. மொத்தம் 455 பிரதிநிதிகள், 95 பார்வை யாளர்கள், 15 முதுபெரும் தோழர்கள் பங்கேற்றார்கள். மாநாடு 22ஆம் தேதி இணைய வழியே பொது மாநாடாகத் துவங்கியது. மாநாட்டில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், பி.வி.ராகவலு, மாநில செயலாளர் டி. வீரபத்ரம் முதலானவர்கள் உரையாற்றினார்கள். மாநிலம் முழுதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொது மாநாட்டில் பங்கேற்றனர். இதற்காக மாநிலம் முழுதும் 155 மையங்களில் பெரிய திரைகள் வைக்கப்பட்டிருந்தன. 23ஆம் தேதி பிரதிநிதிகள் மாநாடு துவங்கி யது. சீத்தாராம் யெச்சூரி துவக்கவுரை நிகழ்த்தினார். அப்போது சர்வதேச நிலைமை, தேசிய நிலைமைகளை விளக்கியதுடன், கட்சி முன் உள்ள சவால்களையும், ஆளும் பாஜக-வை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதனால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்றார்கள். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை இணைய வழியில் தெரிவித்தார்கள். அவர்களுக்கு அதற்கான வசதிகள் செய்து தரப்பட்டன. மாநில செயலாளர் வேலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் சுயவிமர்சனத்துடன் கட்சி சாதித்தவற்றையும், பலவீனங்களையும் குறிப் பிட்டிருந்தார். எதிர்காலக் கடமைகளாக 19 கடமை கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் கட்சியின் இயக்கப்பணி களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தபோதிலும், மக்கள் பிரச்சனைகள் மீது கட்சி பல முக்கியமான போராட்டங்களையும் நடத்தியுள்ளது. அதன் மூலம் கட்சியின் செல்வாக்கு மாநிலத்தில் வளர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் ஆர்எஸ்எஸ் ஊடுருவலை முறியடித்திட, சமுக இயக்கங்களையும், புகழ்பெற்ற ஆளுமைகளையும் உள்ளடக்கி ஒரு விரிவான மேடை அமைப்பது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மனுவாத சித்தாந்தத்திற்கு எதிராக பல்வேறு கலாச்சார வடிவங்களில் பிரச்சா ரம் முன்னெடுத்துச் செல்வது எனத் தீர்மானிக்கப் பட்டது. நிறைவாக அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் பிரகாஷ் காரத் உரையாற்றினார். கட்சியின் சுயேச்சையான பலத்தை அதிகரிக்க வேண்டி யதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.வி.ராகவலு உரையாற்றும்போது, மாநிலத்தில் கட்சியை விரிவுபடுத்திட இருக்கக்கூடிய வாய்ப்பு களைச் சுட்டிக்காட்டினார்.
புதிய மாநிலக்குழு
மாநாடு 60 மாநிலக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்தது. இவர்கள் 15 மாநில செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்தனர். டி.வீர பத்ரம் மீண்டும் மாநில செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். புதிய மாநிலக்குழுவில் எட்டு பேர் பெண்கள். செயற்குழுவில் இரண்டு பேர் பெண்கள். அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதி களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (ந.நி.)