tamilnadu

எஸ்.வி.சேகர் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 25 - சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர் சந்திப்பின்போது, பெண் பத்திரிகையாளரிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டார். இது தொடர்பாக கண்டனங்கள் எழுந்த  நிலையில், ஆளுநர் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தவறான தகவலை, பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எஸ்.வி. சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமெரிக்கா வில் உள்ள ஒருவரின் கருத்தையே அவர் பகிர்ந்ததாகவும், அதை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி, மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய  வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏப்ரல் 2 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை  முன்பாக விசாரணைக்கு ஆஜராக எஸ்.வி.சேகருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்க ளையும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.