ஜூன் 16 முதல் மயிலாடுதுறையில் பருத்தி ஏலம்
மயிலாடுதுறை, ஜூன் 11 - விவசாயிகளின் பருத்தி விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த பருத்தி விளைபொருளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (e-Nam) மூலம் கொள்முதல் செய்ய உள்ளதால், விவசாயிகள் தங்களுடைய பருத்தியினை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விற்பனை செய்ய வரும் போது ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல்களை விற்பனைக் கூடத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில் மற்றும் சீர்காழி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 16.06.2025 முதல் பருத்தி ஏலம் துவங்கப்படவுள்ளதால், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது பருத்தியை சுத்தம் செய்து, நன்கு உலர்த்தி தரமான பருத்தியை தனியாகவும் மற்ற பருத்தியினை தனியாகவும் பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பிளாஸ்டிக் சாக்கில் கொண்டு வருவதை தவிர்த்து, சரியான எடைக்கு, அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேற்படி பருத்தி ஏலத்தில் கலந்து கொள்ள இந்திய பருத்தி கழகம், திருப்பூர், கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட பருத்தி நூற்பு அரவை ஆலை உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதி வாரம் திங்கள்கிழமை செம்பனார்கோவில் விற்பனை கூடத்தில் காலை 10 மணிக்கும், சீர்காழி விற்பனை கூடத்தில் மதியம் 2 மணிக்கும், வியாழன்தோறும் குத்தாலம் விற்பனை கூடத்தில் மதியம் 2 மணிக்கும், சனிதோறும் மயிலாடுதுறை விற்பனை கூடத்தில் காலை 10 மணிக்கும் ஏலம் நடைபெறும். மேற்படி பருத்தி ஏல விபரங்களுக்கு செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; அலைபேசி எண் - 9042914006, மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அலைபேசி எண் - 8012224723, குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அலைபேசி எண் - 8220869684, சீர்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அலைபேசி எண் - 9151448296 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.