அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அஜீஸ் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தனர். அங்கு செல்வதற்கு முன் கொரோனா பரிசோதனை செய்தனர்.
அதில் தொற்று இல்லையென முடிவு வந்தது.இதையடுத்து டிசம்பர் 28-ஆம் தேதிஐயப்பன் கோவிலுக்குச்சென்றனர். டிசம்பர் 31ஆம் தேதி அருப்புக்கோட்டைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், மூத்த சகோதரருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோருடன் இருந்த அவரது மனைவி குழந்தைகள் மற்றும்உறவினர்கள் உட்பட 13 பேரின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர். இதில், பெண்கள் குழந்தைகள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆனால், தொற்று உறுதிசெய்யப்பட்ட ஏழு பேருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.