நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச்21ஆம் தேதி கைது செய்தது. தற்போது அவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்றும் ஜாமீன் வழங்கினால் என்ன நிபந்தனைகள் விதிக்கலாம் என்பது தொடர்பாக விரிவான வாதத்திற்குத் தயாராக வாருங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மே 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து, அமலாக்கத்துறை வாதமும் தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.