பள்ளிப் பருவத்திலேயே கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றவர். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். பாரதி மீது பற்றுக் கொண்டு மாயாண்டி பாரதியானவர். பரலி சு.நெல்லையப்பரின் லோகோபகாரி, திருவிகவின் நவசக்தி ஆகியவற்றில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டு மக்களிடையே சுதந்திர உணர்வை கிளர்ந்தெழச் செய்வதற்காக ‘படுகளத்தில் பாரத தேவி’என்ற பிரசுரத்தை எழுதியவர். விடுதலைக்கு முன்னும் பின்னுமாக 13 ஆண்டுகள் பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்தவர். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலையாகச் சொன்ன இந்து மகாசபையிலிருந்து விலகி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர். ஜனசக்தி, பின்னர் தீக்கதிர் நாளிதழ்களில் தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்தியவர். எள்ளல் எழுத்து, துள்ளல் நடையுடன் அங்கதம் மிளிரும் படைப்புகள் மார்க்சியத்தை மக்களிடம் கொண்டு செல்லப்பயன்பட்டன. எழுத்துத் திறமை மட்டுமின்றி நாவன்மையும் கொண்டவர். பழகு தமிழ் பேச்சில் மக்களைக் கவர்ந்தவர். பாவலர் வரதராசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். தூக்கு மேடை தியாகி பாலுவை தூக்கிலிடுவதற்கு முன் சிறையில் பேட்டி கண்டவர். பல்வேறு சிறு சிறு நூல்கள் எழுதியவர். கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் செயல்பட்டவர். சோவியத் நாட்டுக்கு சென்று வந்தவர். கம்யூனிஸ்ட் கொள்கையைப் பரப்ப நாளெல்லாம் உழைத்தவர். ஐ.மா.பா- என்று தோழர்களால் அழைக்கப்பட்டவர். அவரைச் சுற்றிச் சூழும் சின்னக் குழந்தைகளால் மிட்டாய் தாத்தாவாக மிளிர்ந்தவர். அவரது எழுத்தும் பேச்சும் இனிய பண்பும் என்றென்றும் அவரை நினைவுறுத்தும். நெஞ்சில் நிலைநிறுத்தும்!