புதுக்கோட்டையில் (பிப்ரவரி 5) ஞாயிறன்று காலை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10வது மாநில மாநாடு எழுச்சியுடன் துவங்கியது. துவக்க நிகழ்வில், கடந்த மாநில மாநாடு நடைபெற்ற திருவாரூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை சங்கத்தின் முதல் மாநில பொதுச் செயலாளர் மூத்த தோழர் பெரி.குமாரவேல் ஏற்றிவைத்தார்.
திருவாரூரில் இருந்து தோழர் நாவலன் நினைவாக கொண்டுவரப்பட்ட கொடியை அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன், வெண்மணியில் இருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதியை அகில இந்தியப் பொதுச் செயலாளர் பி.வெங்கட், திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு ஜோதியை மாநிலத் தலைவர் ஏ.லாசர், பி.சீனிவாசராவ் நினைவு ஜோதியை மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், திருச்சி கே.செல்லம்மாள் நினைவு ஜோதியை மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், தேனி எஸ்.மொக்கராஜ் நினைவு ஜோதியை மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., தஞ்சை தியாகி என்.வெங்கடாசலம் நினைவு ஜோதியை மாநில துணைத் தலைவர் பி.வசந்தாமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.