சென்னை,ஏப்.7- தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை ஆளுநர் ரவி முடக்க நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவை நடைமுறை தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மாநில அரசு அனுப்பும் மசோதாவுக்கு தாம் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தால் அது நிராகரிக்கப் பட்டதாக பொருள் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- பொது மேடைகளில் சர்ச்சைக் குரிய அரசியல், சமூக கருத்துகளைப் பேசி மக்கள் மத்தியில் குழப் பத்தை ஏற்படுத்திவந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது சட்டப் பேரவை நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்து களை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகை யில் தெரிவித்து, நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிப்பிரமாணத் துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படும் ஆளுநருக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோப்புகள் முடக்கம்
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள், அவசர சட்டங்கள், சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும், தப்பித்தும் வருவதை ஆளுநர் வழக்கமாக வைத்துள்ளார். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்கு தெரிவிப்பதில்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கப்பட் டுள்ளன. இவை ஆளுநரின் கடமை தவறுதல் மட்டுமில்லாமல், செயல் படாத முடக்குவாத செயலாகவே அமைந்துள்ளது. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் மிகமிக அவசர, அவசிய நோக்கத் தோடு இயற்றப்பட்டது. முதலில் ஏதோ உப்புசப்பற்ற கேள்வியை கேட்டார். பின்பு , ‘இந்த சட்டம் இயற்றும் உரிமையே மாநில அரசுக்கு இல்லை’ என்றார். ‘மாநில அரசுக்கே உரிமை உண்டு’ என்று ஒன்றிய அமைச்சர்களே சொன்ன பிறகும் ஆளுநர் அதனை ஏற்கவில்லை. சட்டம் அறிந்தவர்போல் கருத்து தெரிவிக்கும் ஆளுநருக்கு, அரசியலமைப்பு சட்டப்படி, நிதி மசோதாவை திருப்பியனுப்ப அதிகா ரம் இல்லை.
பதவிக்கு அழகல்ல
இந்நிலையில், ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அவர் அப்படி பேசிய இடம் முறையான இடமும் அல்ல. ‘கிடப்பில் இருந் தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்திற்காக அதனை நிறுத்திவைப்பு என்கிறோம்’ என்று ஆளுநர் பேசியுள்ளார். மாண வர்கள் மத்தியில் இப்படி பேசி யுள்ளார். ரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர் நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொது வெளியில் அலட்சியமாக கருத்துகளை தெரிவிப்பது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும். சம்ஷேர்சிங் மற்றும் பஞ்சாப் மாநில அரசுக்கிடையிலான வழக்கில், மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுநர் என்று சுருக்கமாக சொன்னார் கள்.
அதனை மறந்துவிட்டு ‘தி கிரேட் டிக்டேட்டராக’ தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம். அரசியலமைப்பு சட்டப்படி நிதி மசோதா தவிர பிற வகை மசோதாக் களைஅரசுக்கு ஆளுநர் திருப்பியனுப்பலாம். சட்டப்பேரவை மீண்டும்அந்த மசோதாவை நிறை வேற்றிஆளுநருக்கு அனுப்பினால், அதை அவர் நிராகரிக்க முடியாது. எனவே,ஆளுநர் கேட்ட விளக்கங் களைக் கொடுத்து, மீண்டும் நிறை வேற்றி அனுப்பி வைத்த பிறகும் ஒப்புதல்கள் வழங்காமல் இருப்பது சட்டமுறையும், சட்டம் அறிந்தவர் முறையும் ஆகாது. இதை நம் மாநிலத்தின் நிர்வாகத்தை முடக்கும் செயலாகவே எண்ண வேண்டி யுள்ளது. எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்ப வர்களுக்கு அழகல்ல. அதையும் தாண்டி, அதனை சட்டப்பூர்வமற்ற பொதுவெளியில் பகிர்ந்து கொள்வ துடன், நியாயப்படுத்த முயல்வது மிகமிக மோசமான முன்னுதாரணம். தன் கருத்துகளை திரும்பப் பெறுவதே ஆளுநர் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வதாகும். சட்டப்பேரவையின் மாண்பைக் குறைக்கும் வகையில், ஆளுநர் பேசி வருவது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதை உணர்ந்து தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமை களை முறையாக நிறைவேற்றும் வகையிலும் அவர் செயல்படுவார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.