தடத்தில் பயணிப்போம், ஆயிரமாயிரம் மக்களைத் திரட்டுவோம்!
தோழர் ஜே.எச். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ஹேமச்சந்திரன் அவர்கள். மார்க்சியவாதியாக, மக்கள் தலைவராக தொகுதி மட்டுமல்ல குமரி மாவட்டம், தமிழகம் முழுவதுமான உழைப்பாளி மக்களின் தலைவர். தோட்டத் தொழிலாளர்களைத் திரட்டுவதில் துவங்கி முந்திரி, பீடி, போக்குவரத்து, ஆசிரியர் அரசு ஊழியர்கள் என அனைத்துத்தரப்பு உழைக்கும் மக்களுக்காக செயல்பட்டவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாள ராக, தமிழ்நாடு மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் சிஐடியு மாநிலத் தலைவராகவும் செங்கொடி இயக்கத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர். நில உடைமைக் குடும்பத்தில் பிறந்தாலும் சாதி, மத மொழி அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களை நேசித்த மகத்தான தலைவர் தோழர் ஜே.எச். ஆசிரியர் பணியை உதறிவிட்டு தோட்டத் தொழிலாளர்களிடையே பணி செய்ய தோழர் ஜிஎஸ் மணியோடு இணைந்து தனது பணியைத் தொடங்கினார்.
சிறையில் இருந்தே சட்டம் பயின்றவர்
தொழிலாளர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறையில் இருந்தவாறே சட்டம் பயின்று நீதிமன்றத்தில் வாதாடி கோரிக்கைகளை வென்றெடுத்தவர். மண்டைக்காடு கலவரத்தின் போது ‘வேணுகோபால் கமிஷன் ‘பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியவர்.அமைதியை உருவாக்க முன்னிலை வகித்த உன்னதமான தலைவர். சமரசமற்ற போராளி அவர்.
அவருடைய மலையாளம் கலந்த தமிழ் பேச்சும் உச்சரிப்பின் அழுத்தமும் கணீரென்ற குரலால் தமிழக சட்டப்பேரவையில் அனைவரையும் ஈர்த்தவர். சட்டமன்றக் குழு தலைவராக கட்சியின் கொள்கைகளையும் மக்களின் கோரிக்கைகளையும் ஒருசேரக் கொண்டு சென்றவர். தமிழக தலைமைச் செயலகக் கோட்டையில் 10 மாடி நாமக்கல் மாளிகையின் கீழ்தளத்தில் தோழர் ஜே.எச். நின்றால் 10-ஆவது மாடி வரை தகவல் பரவும்... அதிரும். அத்துணை மரியாதைக்குரிய வணக்கத்துக்குரிய தலைவராகத் திகழ்ந்தவர்.
பாராட்டும் பண்புடையாளர்
சீனியர், ஜூனியர் பேதமில்லாமல் நல்ல காரியங்களை முன்னெடுத்தால் மனமுவந்து பாராட்டும் பண்புடையாளர். என்னைப் பொறுத்தவரையில் 1996 உள்ளாட்சி மன்ற தேர்தலில் தோழர் ஜே.எச்.எங்களுக்கு மண்டலப் பொறுப்பாளர். ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொறுப்பு ஏற்பு நிகழ்ச்சியில் உடனிருந்து பொறுமையுடன் தனது பணியைச் சாதுரியமாக நிறைவேற்றிய பெருமைக்குரிய தலைவர். 1996ஆம் ஆண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளாக எங்களை அழைத்துக்கொண்டு பேருந்தில் சென்னை உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டுக்கு சென்றார்.இரவு உணவு முடித்து கடலை மிட்டாய் வாங்கி தந்துவிட்டு சிறிது நேரத்தில் ஒரு பாயை விரித்து தரையில் படுத்து தூங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியாக இன்றும் எனது மனதில் நிழலாடுகிறது
.2006இல் நான் சட்டப்பேரவை உறுப்பினர். தமிழக சட்டமன்ற அனைத்துத் துறைச் செயலாளர்களோடும் பழகுவதற்கு உறுதுணையாக இருந்தவர். அவர் இறந்து இன்று 17 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் நமது நெஞ்சங் களில் இரண்டற கலந்திருக்கும் தலைவரின் மறைவு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. 2008 பிப்ரவரி 9 அன்று பத்திரிகைகள் எழுதின, நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர், ஒருசில வேஷ்டிகளும் சட்டைகளும் தவிர்த்து வேறொன்றும் சேமிப்பு இல்லாத தலைவர் என்று. மரணத்தின் இறுதி நிகழ்வில் கூடிய தமிழகத்தின் உழைப்பாளி மக்களே அவரது சொத்துக்கள். குலசேகரம் முதல் திருவட்டார் வரை அனைத்து வணிகப் பெருமக்களும் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது.
இறுதி நிகழ்ச்சியின்போது, கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் மக்கள் தலைவர் தோழர் என்.வரதராஜன் சொன்னதைப் போன்று சொக்கத் தங்கமாக ஜொலித்தவர் தோழர் ஜே.எச்.
தோழர் ஜே.எச். மற்றும் மறைந்த தலைவர்கள் ஜி.எஸ்.மணி, பி.பெருமாள், பி.திவாகரன், டி.மணி, வி.ராதாகிருஷ்ணன், எஸ்.செல்லையா தாஸ், வி.கே.இஸ்மாயில்,ஏ.எஸ்.கிருஷ்ணன் குட்டி போன்ற தன்னலமற்ற அர்ப்பணிப்பு மிக்க தலைவர்கள் ஏந்திப் பிடித்த செங்கொடியை - வலுமிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, குமரி மண்ணில், தமிழகத்தில் விரிவடையச் செய்கிற ஜே.எச். போன்ற ஆயிரமாயிரம் தலைவர்களை, அடுத்த தலைமுறையினரை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் நம்முடைய பணி மேலும் தடம் பதிக்க வேண்டியுள்ளது.
கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டை வலுமிக்க மாநாடாக இன்றைய ஆளும் வர்க்கத்தின் அடாவடித் தனங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்கிற சிவப்பு தளமாக மாற்ற தோழர் ஜே.எச். நினைவு தினத்தில் உறுதியேற்போம்.