tamilnadu

img

மகத்தான போராளி தோழர் சி.ஜி.,!

தோழர் ‘சி.ஜி.’ என அழைக்கப்பட்ட தோழர் சி. கோவிந்த ராஜன் கடலூர் மாவட்டம், சிதம்பரத் திற்கு அருகில் உள்ள பெருமாத்தூர் கிராமத்தில் திரு. சின்னசாமி – பெரிய ஆயாள் ஆகியோரின் ஒரே மகனாக 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ந் தேதி பிறந்தார். 2008 ஜனவரி மாதம் 26ந் தேதி நெல்லிக்குப்பத்தில் மறைந் தார். 87 ஆண்டுகள் வாழ்ந்த இவர் பெரும்பகுதி காலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் அரும்பணியாற்றினார்.  தனது வாழ்நாளில் எட்டரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை, ஐந்தரை ஆண்டுகள் தலை மறைவு வாழ்க்கை என தியாக வாழ்வை மேற்கொண்டார். 1962ம் ஆண்டு இந்திய –  சீன எல்லையுத்தம் ஏற்பட்ட போது தென்னாற்காடு மாவட்டத்தில் கைது செய்யப் பட்ட பலரில் தோழர் சி.கோவிந்தராஜனும் ஒருவர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இவரது தாயார் மரணமடைந்துவிட்டார். தாயாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள சிறைத்துறை அனுமதி மறுத்துவிட்டது. சிறையில் இருந்த பி.ராமமூர்த்தி, எம்.கல்யாண சுந்தரம் மற்றும் தோழர்கள் இவருக்கு ஆறுதல் கூறினர். தமிழக உள்துறைச் செய லாளரை தொடர்பு கொண்டு அழுத்தமாக வற்புறுத்திய பின்னரே காலங்கடந்து அவருக்கு பரோல் வழங்கப்பட்டு ஊருக்கு நள்ளிரவில் வந்தடைந்தார். ஆனால் அதற்கு முன்னரே தாயாரின் இறுதி நிகழ்வுகள் முடிந்துவிட்டன. தன்னை பெற்றெடுத்த தாயின் முகத்தை கடைசியாக பார்க்கும் வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை. நெல்லிக்குப்பத்தில் பாரி ஆலை நிர்வாகத்தின் அடாவடிகளை எதிர்த்து 50 ஆண்டுகளுக்கு மேல் போராடியவர். 1973ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, தோழர் சி.ஜி. அவர்களை தீர்த்துக் கட்ட குண்டர்களை ஏவி அவர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. கத்தி யால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலை யில், குடலை கையில் ஏந்திக்  கொண்டு கடலூர் மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று மரணத்திலிருந்து தப்பினார். தியாக வாழ்வுக்கு சொந்தக்காரரான தோழர் சி. கோவிந்தராஜன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது மாணவர் இயக்கத்தின் மூலம் விடுதலைப் போராட்டத்திலும், பொதுவுடமை இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர். படிப்பை முடித்த பின்னர் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைத் தொழிற்சாலையில் கிடைத்த வேலையை உதறிவிட்டு தொழிற்சங்க செயலாளராக, முழுநேர ஊழியராக பரிணமித்தார். ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தில் ரயில்வே தொழிற்சங்கம், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை தொழிற்சங்கம், நெய்வேலி அனல்மின்நிலையம் தொழிற்சங்கம், வடலூர் எஸ்.ஐ.எல்.என்.சி.ஆர்.எல் தொழிற்சங்கங்கள், கைத்தறி நெசவாளர் போராட்டங்கள் மற்றும் திருக்கோயிலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி வட்டங்களில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டங்களின் மூலம் தொழிற்சங்க இயக்கத்தையும், விவசாய இயக்கத்தையும் கட்டுவதில் மூலகர்த்தாவாக திகழ்ந்தவர்.

இன்று (15.9.2023) தோழர் சி.கோவிந்தராஜன் பிறந்த நாள்