tamilnadu

img

போட்டித் தேர்வு : முட்டை சைவம், கீரை அசைவம்!!!

அலோ... எப்புடி இருக்கீங்க..
என்ன இன்னிக்கி... எங்க பக்கம் திரும்புறீங்க.. எப்பவும் சீனியரத்தான் தேடுவீங்க... 
அப்புடிலாம் இல்ல.. அவரு சீனியர்னு தெரியாமத்தான் பழகிட்டேன்... அப்புறம் ரெண்டு பேருக்குமே பழகிருச்சு..
ஆமா... நாங்களும் பாத்துருக்கோம்.. அவரும் வந்தா உங்களைத் தேடிட்டேதான் வருவாரு..
இன்னிக்கு நீங்கள்லாம் என்ன படிக்கப் போறீங்க..?
பார்றா.. எங்களோட வர்றீங்களா.. படிக்கல... சும்மா பேசிட்டு இருக்கப் போறோம்.. முதல்ல தர்பூசணி வாங்கிட்டு வரலாம்..
வாங்கிட்டு வர்றதா... இங்க கொண்டு வந்து சாப்புறதா?
ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டே சாலையைக் கடக்கத் தொடங்கினர்.
நம்மள மாதிரிதான் தர்பூசணி வாங்க தென் ஆப்பிரிக்க சாலைகள்ல ஐரோப்பியர்கள் நடந்துருப்பாங்களோ..
தேர்வரின் கண்கள் விரிந்தன. காதுகள் கூர்மையாகின. பாத்து நடங்க... டிராஃபிக் ரொம்ப இருக்கு என்று எச்சரிக்கவும் செய்தார்.
ஆமா. அவங்களுக்கு அந்தப் பிரச்சனை இருந்திருக்காது. 16வது நூற்றாண்டா இருந்திருக்கலாம்.. இவ்வளவு வண்டிலாம் கிடையாதுல்ல.. 
தர்பூசணிய எதுக்காக அங்க வாங்கனும்..?
தென் ஆப்பிரிக்காதான் Citrillus lanatus தோன்றுன இடம்..  
நாம தர்பூசணி வாங்கத்தான போறோம்... இதென்ன புதுசா..?
இதுதான் தர்பூசணியோட தாவரவியல் பேரு.. 
மனதிற்குள், ‘தக்காளி சாதத்தை, ஆக்சாலிக் ஆசிட் சாதம்னு சொல்ற கும்பல் இதுதானோ’ என்ற எண்ணியவாறு சாலையைக் கடந்தார்.
தர்பூசணி வாங்கிக் கொண்டு மீண்டும் பயிற்சி மைய வளாகத்திற்கே வந்தனர். ஒரு தேர்வர், பாக்கெட்டில் கையை விட்டு கத்தியை எடுத்தார். வகுப்புக்குப் பேனாவோட வருவாங்க... இவரு என்னடான்னா கத்தியோட வந்துருக்காரே என்று தேர்வரின் புருவங்கள் உயர்ந்தன.
இரண்டு பக்கமும் இருவர் பிடித்துக் கொள்ள, கத்தியை நடுவில் வைத்துக் கீறினார். தேர்வர், என்ன இது... ஏதோ கறி வெட்டுற மாதிரி வெட்டுறீங்க..?
ஆமா... இது கறிதானே.. 
தேர்வரோ, என்ன சொல்றீங்க.. வெட்டப் போறது தர்பூசணி... ஏதோ மீன் வெட்டப் போற மாதிரி இருக்கு..
தர்பூசணி அசைவம்தான... 
என்ன இது.. அதிர்ச்சி மேல அதிர்ச்சி குடுக்குறீங்க..
ஆமாங்க... இது செடிலதான வளருது... செடிக்கு உயிர் இருக்குல்ல.. வெட்டி எடுக்குறப்ப செடிக்கு வலிச்சுருக்குமே.. 
செடிக்கு உயிர் இருக்குனு சொல்றது சரி... அதுக்கு வலிக்கும்னு சொல்றதெல்லாம் ஓவரா இருக்கு..
கொஞ்சம் மசாலா சேத்து சொல்லிட்டேன்.. ஆனா, வெட்டுறப்ப துடிக்கும்ல.. செடிக்கு உயிர் இருக்குனு எப்புடி சொல்றீங்கன்னு 1905ல ஜகதீஷ் சந்திர போஸ்கிட்ட கேட்டப்ப, அவர் ஊசில விஷத்த எடுத்து செடிக்கு செலுத்துனாரு... செடி துடிச்சுருக்கு... கொஞ்ச நேரம் கழிச்சு செத்துப் போயிருச்சு..உயிருக்குப் போராடிக்குன்னுதான பாக்கனும்..
திடீரென்று குறுக்கிட்ட மற்றொரு தேர்வர் இவரு செடிக்கு ஊசி போட்டுட்டு இருந்தப்ப, ஆங்கிலேயர்கள் வங்கத்தை ரெண்டாப் பிரிச்சிட்டு இருந்தாங்க... ஜேசி போசும் வங்காளத்துக்காரர்தான்.. 
அவரோட துணைவியார் அபலா தாஸ், பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடுனவங்களாச்சே.. - மற்றொருவர்.
ஆமாமாம்.. உயிர் இருக்குனு சொன்னா, தர்பூசணி அசைவம்தான..
கீரை நிறைய சேத்துக்கோங்க... நிறைய சேத்துக்கோங்கன்னு சொல்றாங்க... அப்போ அது அசைவமா..?
ஆமா.. அசைவம்தான்.. அதுக்கு உயிர் இருக்குல்ல... இன்னொன்னு.. முட்டை சைவம்தான..
அலோ... ஒவ்வொரு குண்டா வீசுங்க... அதெப்புடி முட்டை சைவமாச்சு... இப்பல்லாம் எல்லாரும் சாப்புட ஆரம்பிச்சுட்டாங்க.. அதனால சொல்றீங்களா..?
இல்ல.. ரெண்டு முட்டை இருக்குல்ல... ஒண்ணு நாட்டு முட்டை... அதுலருந்து குஞ்சு வரும்... உயிர் இருக்கு.. இன்னொன்னு பிராய்லர் முட்டை.. அதுல இருந்து குஞ்சு வராது.. அதுல உயிர் இல்ல.. 
ஆமா... அதுல செயற்கை ஹார்மோன்களயும், மருந்துகளயும் செலுத்துறாங்க.. நாட்டு முட்டைல அதெல்லாம் போட மாட்டாங்க.. 
அப்போ முட்டை சைவம், கீரை அசைவம்னு சொல்ல வர்றீங்க... லாஜிக் சரிதான்... ஆனா பல ஓட்டல்கள்ல பெயர்ப்பலகைலாம் மாத்த வேண்டியிருக்கும்..
சரி... சரி.. சீக்கிரமா வெட்டுங்க... சாப்புடலாம்..
எதுக்கு வாங்குனோமோ, அந்த வேலையையே பாக்கலையே..
ஆரம்பிக்கவே இல்லையா... என்னப்பா சொல்றீங்க.. இது பெரிய குண்டா இருக்கே..
சரியாச் சொன்னீங்க... அணுகுண்டு.. இந்தாங்க புடிங்க... இப்போ உங்க கைல இருக்குறது அணு... உங்க கையால நீங்களே வெட்டுங்க.. 
பீஸ், பீஸாப் போட்டுறலாமா..? 
போடுங்க... அதுக்கு முன்னாடி, அணுவைப் பிளக்கும் உங்களுக்கு எல்லாரும் ஒரு தடவ கை தட்டிக்குறோம்... அனைவரும் கை தட்டினர்.
ஒரு மையத்திற்கு வந்து நின்று விளக்கத் தொடங்கினார். இது அணுவோட மாதிரி... விதைகள்தான் எலக்ட்ரான்கள். தைத்து வைத்த மாதிரி புதைஞ்சு இருக்கும்... ஜே.ஜே.தாம்சன்தான் இந்தக் கோட்பாட்டை நமக்குத் தந்தாரு.. 
இதத்தான் நாம இப்பவும் பின்பற்றுறோமா..?
இல்ல... இன்னும் மேம்பட்ட கோட்பாடுகள் வந்துருச்சு... ஆனா இந்த முன்னேற்றத்துக்கு இவர மாதிரியான அறிவியலாளர்கள் குடுத்த கோட்பாடுகள்தான் காரணமா இருக்கு.. நமக்குத் தேர்வுல தர்பூசணிக் கோட்பாட்டக் குடுத்தவர் யார்னு கேப்பாங்க..
தர்பூசணியைப் பாத்த வெறும் அணு மட்டுமில்ல.. அணுகுண்டே நம்ம முன்னாடி இருக்குற மாதிரி இருக்கு.. முன்னாடிலாம் ஜெ, ஜெனு சொன்னா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் நினைவுக்கு வருவாங்க... இப்போ தாம்சனும் சேந்து வருவார்.. இப்புடித்தான் நீஙகள்லாம் தினமும் படிப்பீங்களா..?
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இப்புடிப் படிக்குறோம்.. காட்சிப்படுத்தி கற்பனை பண்றோம். அதயும் கூட்டா சேந்து செய்யுறோம். அந்த நேரத்த ஜீரோ அவர்னு(பூச்சிய நேரம்) வெச்சுக்குறோம்... 
அதென்ன பூச்சிய நேரம்..?
இப்போ மணி என்ன?
12.30 ஆகுது... 
நாம 12 மணிக்கு ரோடத் தாண்டிட்டு இருந்தோம்... 12த்தான் பூச்சியம்னு குறிக்குறோம்... 
வேற எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே..
நாடாளுமன்றத்துல பூச்சிய நேரம்னு இருக்கு... அதுவும் 12 மணிக்குதான்... அவசர, முக்கியமான கேள்விகள உறுப்பினர்கள் அப்ப எழுப்பலாம்... பொதுவா 15 நாளுக்கு முன்னாடியே கேள்விகள அனுப்பனும்.. பூச்சிய நேரத்துக்கு அன்னிக்குக் காலைல குடுத்து பிரச்சனைய எழுப்பலாம்..
சூப்பர்... நாளைக்கும் பூச்சிய நேரத்துல உங்களோட சேந்துக்குறேன்... வரட்டுமா..?
திரும்பி சில அடிகள் வைத்தபோது எதிரே சீனியர் வந்து கொண்டிருந்தார்.
சீனியர்... என்ன ஆச்சு... ஏன் லேட்டு.. நீங்க சொன்ன மாதிரியே இங்க சில பேரு படிக்குறாங்க... அவங்களோட போய் தர்பூசணி சாப்புட்டேன்...
தர்பூசணியா..?
அட... அது உங்களுக்குத் தெரியாதா என்று நடந்ததைச் சொல்லத் தொடங்கினார்.