tamilnadu

ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்த முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை,மார்ச் 24- ஊரடங்கு தளர்வுகள்  குறித்து முதல்வர் தலைமையில் உயர் மட்ட குழு மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி தற்போதுள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி கொள்வதற்கு  ஆலோசனை நடத்த இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தமிழகத்தில் ஏற்கனவே அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது.  பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் தற்போது தமிழகத்தில் இல்லை.  முதல்வர் தலைமையில் உயர் மட்ட குழு மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி தற்போது உள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி கொள்வதற்கு குறித்து ஆலோசனை நடத்தப்படும்.  தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் அண்டை மாநிலங்கள், நாடுகளில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.  நாம் இன்னும் முழு அளவில் தொற்றில்  இருந்து மீண்டு வரவில்லை. பொது மக்கள்  தமிழக அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.