tamilnadu

img

கண்ணூரில் நாயனார் அருங்காட்சியகம் : முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்

கண்ணூர், ஏப்.5- மக்கள் நெஞ்சில் அழியாத தலைவரின் நினைவாக நாயனார் அகாதெமியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இங்கு நாயனாரின் போராட்ட வாழ்வும், போராட்ட வழிகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் பினராயி விஜயன் திங்களன்று (ஏப்.4) திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர், அரசியல் எதிரிகளின் மனதில் உட்பட தனி இடத்தைப் பெற்ற தலைவர் நாயனார் என்று கூறினார். அனைவரின் அன்பையும் ஏற்கும் நிலை மட்டுமல்ல, தியாகமும், போராட்டமும், துன்பமும் நிறைந்தது அந்த வாழ்வு. அவை கட்சியின் வரலாறும் கூட. இதையெல்லாம் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இ.கே.நாயனார் அறக்கட்டளையின் தலைவரான முதல்வர் தெரிவித்தார். விழாவிற்கு கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த அருங்காட்சியகம் அகாடமியின் முதல் கட்டமாகும், இது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விளக்கப்படங்கள் மற்றும் விளக்கக்காட்சிகளால் நிறைந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு கேரளாவின் பங்களிப்பை இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் ஆழமாகப் புரிந்துகொள்ளும் வகையில் அகாடமி மாற்றப்படும். குறிப்புகள் எடுக்கவும் படிப்பிற்கான வசதிகளும் இங்கு வழங்கப்படும். சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இந்தியாவில் இதுவே முதல் அருங்காட்சியகம். நிகழ்ச்சியில் நாயனாரின் மனைவி சாரதா டீச்சர், குழந்தைகள் சுதா, உஷா, கிருஷ்ணகுமார், வினோத்குமார், மருமகன் கே.சி.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.கே.ஸ்ரீமதி, கே.கே.சைலஜா, அமைச்சர் எம்.வி.கோவிந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மத்தியக்குழு உறுப்பினர் இ.பி.ஜெயராஜன் வரவேற்றார், மாவட்டச் செயலர் எம்.வி.ஜெயராஜன் நன்றி கூறினார்.