சிதம்பரம்,பிப்.17- சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடை யில் ஏறி சாமி கும்பிட சென்றது தொடர்பான விவகாரத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி கும்பிட சென்ற பெண் ஒருவரை சாதிப்பெயரை சொல்லி அங்கிருந்த தீட்சிதர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பணியாற்றி வரும் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை உள்ளது. இதன்மீது ஏறி சாமி தரிசனம் செய்வது தொடர்பாக அங்குள்ள தீட்சிதர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையால் சஸ்பெண்டு செய்யப்பட்ட கணேஷ் தீட்சிதர் என்பவர் சாமி கும்பிட சென்றபோது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் பேரில் சிதம்பரம் நகர போலீசார் 3 தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி வழக்குபதிவு செய்திருந்தனர்.