ஒன்றிய அரசும், நிதி அமைச்சகமும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் சிவமுருகன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட வன பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு, பொதுமக்களின் கருத்துகள் 15 நாளில் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கருத்துகள் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாத மக்கள் கருத்து தெரிவிக்க முடியாது சூழல் உள்ளதாக ஒன்றிய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வனத்திருத்த சட்டம் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதித்தனர்.
இந்த தடை உத்தரவை ரத்துசெய்யக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசும், நிதி அமைச்சகமும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசு பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை, ஆனால் ஒன்றிய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தால் மட்டும் உடனே மேல்முறையீட்டுக்கு வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.