சென்னை, ஜூன் 19- சென்னை மற்றும் புறநகரில் பெய்த கனமழை காரணமாக ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் செவ்வாயன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழை காரணமாக திங்கட்கிழமை பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப் பட்டது. சென்னையில் பெய்துவரும் கன மழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதி களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடு பட்டனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
புறநகரிலும் பலத்த மழை
அதேபோல் சென்னையை சுற்றி யுள்ள பூந்தமல்லி டிரங்க் சாலை, பூந்த மல்லி பாரிவாக்கம் சாலை, ருக்மணி நகர், பெரியார் நகர், கரையான்சாவடி, குமணன்சாவடி உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. கிண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் முதல் சென்னை விமான நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரம்பூர், புளியந் தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம் பேடு, கிண்டி கத்திபாரா, திருமங்கலம், தரமணி, பெருங்குடி ஓஎம்ஆர் சாலை யிலும் மழைநீர் அதிகம் தேங்கியது. பெருங்குடி ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரு வதால் அங்கு மழைநீர் தேங்கி, கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட் டது. ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் மழைநீர் தேங்கியதாலும், பிரதான சாலை யில் 40 வருட பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கிண்டி கத்திப்பாரா சுரங்கப்பாதை யில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதிகள வில் நீர் தேங்கியுள்ளதால் சுரங்கப்பாதை மூடப்பட்டது. தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிய பின்னர் மீண்டும் சுரங்கப்பாதை போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டது.
கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செவ்வாயன்று (ஜூன் 20) 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானி லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக் கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களி லும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திரு வண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங் கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20-ஆம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும். செங்கல் பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணா மலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவாய்ப்புள்ளது. 21-ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22, 23ஆம் தேதிகளில் தமி ழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக் கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
ஜூன் மாதத்தில் அதிக மழை ஏன்?
சென்னையில் ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்தது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே சென்னையில் கனமழை பெய்வதற்கான காரணம். கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் அதிகளவில் பெய்துள்ளது. திங்கட்கிழமை சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இது 73 ஆண்டுகளில் பெய்த 3 வது அதிக கனமழையாகும். சென்னையில் இயல்பான அளவான 4 செ.மீட்டரை விட 163 விழுக்காடு அதிகமாக (10.3 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடதமிழக - தென்ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.