பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்திப் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது வன்முறையை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் க்ரைம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பாஜக சார்பில் நடந்த போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியிருந்தார். மேலும் கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநில மக்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் அவர் பேசியிருந்தார். அவரது இந்த கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும், கன்னடர்களும் கண்டிப்பாக நிராகரிப்பார்கள் என்றும், தேர்தல் ஆணையம் இந்த வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியுள்ள ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் திமுக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது வன்முறையை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் க்ரைம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.