tamilnadu

img

“உண்மையை புதைக்க முடியாது!” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

கொன்றுண்ணி விலங்குகள் தங்கள் பசிக்காகவே கொல்கின்றன. அது இயற்கை நியதி.“கொன்றால் பாவம்;தின்றால் போச்சு” என்பது பொருளுள்ள பழமொழி.வேட்டை நாய்கள் தங்கள் எஜமானன் கட்டளைக்காகவே கொல்கின்றன. நிழல் உலக தாதாக்களின் அடியாட்களும் ஒரு வகையான வேட்டை நாய்களே. அத்தகைய அடியாட்கள் தங்களது தாதாக்களுக்காக அடிமுட்டாள் தனமாக,மரணத்தை நிகழ்த்துகிற வேலைகளையும் செய்வார்கள். இப்படியான வேட்டைநாய் பிழைப்பில்,எதிர்பாரா சிக்கலில் மாட்டி,அதிலிருந்து விடுபடப்  போராடும் தந்தை,மகனின் உணர்வுகளை,நெருக்கமாக நின்று பேசுகின்றது”ஹவுண்ட்ஸ்” என்ற மொராக்கோ நாட்டுப் படம்.  காஸாப்ளாங்ஹா, மொராக்காவின் வணிக நகரம். ஜெல்லாவுடாவ் மற்றும் டிப் என்பவர்கள் இரண்டு நிழலுலகக்  கூட்டத்தின் தாதாக்கள். 

டிப்-ன் அடியாளாக வேலை செய்பவன் ஹசன்.அடிக்கடி சிறைக்குச் சென்று வருபவன். வயதான தாய் மற்றும் நிரந்தரமான வேலையற்ற மகன் இஸாம் இவனது குடும்பம். இஸாம், அவ்வப்போது கிடைக்கும்‌ சொற்பக் கூலிக்காக சுமை சுமக்கும் வேலைப் பார்ப்பவன்.  சட்டத்திற்கு புறம்பான நாய் சண்டை சூதாட்ட பந்தயத்தில் இரு தாதாக்களின் வளர்ப்பு நாய்கள் மோதுகின்றது.ஊக்கமருந்து ஊட்டப்பட்ட ஜெல்லாவுடாவின் நாயோடு,டிப்பின் பாசத்திற்குரிய நாய்,தோற்று இறந்தும் போகிறது. நாய் தோற்ற வருத்தத்திலிருக்கும் டிப்பை,ஜெல்லாவுடாவின் அடியாள் அடித்து சிறுமைப்படுத்துகிறான். இதனால் கோபமடைந்த டிப், அவனைப் பழிவாங்கத் துடிக்கிறான். அவனை உயிரோடு கடத்தி வரும் பொறுப்பை ஹசனிடம் ஒப்படைக்கிறான். ஹசன் அவனது மகன் இஸாமை, கணிசமான பணம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி,துணையாக அழைத்துச் செல்கிறான்.திட்டப்படி அவனை கார் டிக்கியில் மூட்டையாகக் கட்டி கடத்துகின்றனர்.ஆனால்,வரும் வழியில்  ஜெல்லாவுடாவின் அடியாள் மூச்சடைத்து இறந்து போகிறான். பிணத்தை பார்த்த டிப்,பயத்தில் ஹசனை திட்டித் தீர்க்கிறான். இரவுக்குள் எப்படியாவது பிணத்தை அப்புறப்படுத்தக்கட்டளையிடுகிறான்.காரில் பிணத்தை வைத்துக் கொண்டு அதை அப்புறப்படுத்த  தகப்பனும் மகனும் பல வழிகளில் முயற்சிக்கிறார்கள்.தடைகளையும் சந்திக்கிறார்கள்.இறுதியில் பிணம் என்னானது?என்பதே  கதை.

இஸாம் காபி கடையில் அமர்ந்திருக்கையில்,ஒரு நண்பன் பிரெஞ்சு மொழியாக்கப் பணிக்கு மாதம் 4000 டிர்ஹாம் சம்பளம் பெறுவதாகக் கூறுகிறான்.மற்றொரு நண்பனோ,மூன்று மணி நேரத்திற்கு 5000 டிர்ஹாம் குறுக்கு வழியில் சம்பாதிப்பதாகக் கூறுவதையும் கவனிக்கிறான். ஆனால் இஸாமோ,காய்கறிக் கூடையை வண்டியிலிருந்து இறக்கி,கடையில் வைப்பதற்கு தினக்கூலியாக 60 டிர்ஹாம் பெற்றதாக தனது தந்தையிடம் கூறுகிறான்.அதுவும்,வேகமாக நட.... வேகமாக நட... என்ற முதலாளியின் அச்சுறுத்தலான குரல்களுக்கிடையில் இந்த வேலையை விரைந்து செய்து இக்கூலியை பெறுகிறான். பிரிதொரு காட்சியில் பிச்சையெடுக்கும் சிறுவன், ஹசனிடம் 1 டிர்ஹாம் பிச்சை போடு, என உரிமையோடு கேட்கிறான். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இக்காட்சிகளை இணைத்து பார்க்கையில்,உழைப்புக்கான மரியாதையும் ஊதியமும் சூழலைப் பொறுத்து மாறுவதையும்,வேலை இன்மையின் கொடுமையையும், மனித ஆசை குறுக்கு வழியை நாடுவதையும்,கதையோட்டத்தோடு  அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. பிணத்தை வெட்டி அடுப்பில் போட்டு எரிப்பதற்கு கூலியாக, 7000 டிர்ஹாம் கேட்கிறான் ஒருவன். ஆனால்,2000 டிர்ஹாம் மட்டும் தருவதாக டிப்,பேரம் பேசுகிறான்.அவன் மறுக்கிறான். 3000 டிர்ஹாம் தருவதாகக் கூறுகையில்,”நான் கோழி வெட்டுபவன் அல்ல”என மீண்டும் மறுக்கிறான். இறுதியில் 7000 டிர்ஹாமுக்கு,டிப் ஒப்புக் கொள்கிறான்.அவனும் இறந்த மாட்டை வெட்டுவதுபோல்,பிணத்தை ஆக்ரோசமாக வெட்டுகிறான். இது பார்வையாளர்களின் உள்ளங்களை பெரிதளவில் தொந்தரவு செய்யக்கூடிய காட்சிகளாகும். 

பிணத்தை புதைக்கச் செல்லும் வழியில் கழுதை ஒன்று சாலையை மறித்து நிற்கிறது.இது கழுதையா அல்லது Djinn என்ற இறைத் தூதனா,என ஹசன் நினைப்பது இஸ்லாமிய வாழ்வியல் நம்பிக்கைகளாகக் காட்டப்பட்டுள்ளன. மத நம்பிக்கையின் படி, பிணத்தைக் குளிப்பாட்டிய பின்னரே அப்புறப்படுத்த முயற்சிப்பது,இறந்த உடல்களை கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடத்த வேண்டும் என்ற உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் அவர்களது அரசியலமைப்பு கோட்பாடுகளின்படி உறுதி செய்துள்ளதை நினைவூட்டுகிறது. புதைக்க இடம் தேடி அலையும் போது,ஹசனின் நண்பன், “விவசாயிகள்,விளைநிலங்களை விற்று,நகரை நோக்கி சென்று விட்டனர்.எங்கும் நிலங்கள் தரிசாகவே இருக்கிறது. அங்கு புதை”என வலியுறுத்துகிற காட்சி மூலம்,மொராக்கோ நாட்டு விவசாயிகளின் நிலையையும் பேசுகிறது. இப்படம், சிக்கலான விஷயங்களை எளிமையாக வெளிப்படுத்தும்  நாடகபாணி திகில் கறுப்பு நகைச்சுவை (Black comic drama thriller) வகைமையைச் சார்ந்தது.

அதிகமான நெருக்கக் (குளோசப்) காட்சிகள் மற்றும் இரவு நேர ஒளிப்பதிவு காட்சிகள் வித்தியாசமானவை.ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்திலான பின்பலத்தில்  இரவு நேரக் காட்சிகளின் ஒளிப்பதிவு அபாரம்.2023 கேன்ஸ் விழாவில் கோல்டன் கேமரா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கதையின் உயிர் நாடியான மனச்சோர்வோடு அலையும் இருக் கதை மாந்தர்களின் உள்ளப் பிரதிபலிப்பை அப்படியே கடத்திய ஷாக்ஸாபோன் இசைக்கருவியின் மெல்லிய பின்னணி இசை அற்புதம்.  நடித்த அனைவருமே தொழில் முறை நடிகர்கள் இல்லை என்றாலும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். குறிப்பாக தந்தை,மகனாக நடித்த மாஸ்டோன்ரி, இலாய்ட் மிரட்டியுள்ளனர்.   “ஹவுண்ட்ஸ்”பல விருதுகளை வென்றுள்ளது.2023 கேன்ஸ் திரைப்பட விழாவில்”Un Certain Regard Award Jury Prize”-ஐ இப்பட இயக்குநர் கமல் லஷ்ராஹ்-க்கு அளித்து சிறப்பித்துள்ளது. பிணத்தை மண்,நீர்,வாயு மற்றும் தீ ஆகிய எவற்றோவாவது கலந்து அப்புறப்படுத்த முயற்சித்தாலும், நெருப்பே உதவுகிறது.ஆனால்,தெரு நாய் பிணத்தின் கருகிய கையை மட்டும்,பிளாஸ்டிக் குப்பையிலிருந்து எடுத்து வரும் காட்சியோடு படம் முடிகிறது.இது மூடிமறைத்த உண்மை எப்படியும் வெளிச்சத்திற்கு வரும் என்பதை குறியீடாகக் காட்டுகிறது. பிரைம் அமேசானில் உள்ளது.