கோவை, ஜன.25- கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ஜவுளி உற்பத்தியாளர்கள் மீறுவதற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் பிரச்சனைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை, திருப்பூர் மாவட்ட குழுக்களின் சார்பில் செவ்வாயன்று சோமனூர் மின்வாரிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.காமராஜ், சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்பநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அமைச்சர்கள், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் ஏற்படுத்திய கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது. முதலாளிகளின் இச்செயலை கண்டிப்பதுடன், கூலி உயர்வு வழங்க முதலாளிகளை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும். மேலும், இந்த ஒப்பந்தத்தில் சட்டரீதியிலான உரிமை இல்லை எனவும்,
சட்ட உரிமையை ஏற்படுத்த மாநில அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்கமுடியாது. தங்களது முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்படுகிறது என்ற உணர்வோடு இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும். மாநில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தம் மீறப்படும்போது மாநில அரசு தலையிட வேண்டும். மாறாக, தொழிற்சங்கம் மற்றும் விசைத்தறி தொழிலாளர் சங்க தலைவர்களை ஏதோ ஒரு காரணத்துக்காக காவல்துறையைக் கொண்டு நிர்பந்தபடுத்துகிற ஏற்பாட்டை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். மாநில அரசு சட்டம், ஒழுங்கு நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த பிரச்சனைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசு ஏற்கனவே கொடுத்திருக்கும் வாக்குறுதியின்படி சோமனூர் பகுதியில் ஜவுளிப் பூங்காவை ஏற்படுத்த வேண்டும், என்றார்.