புதுதில்லி, டிச. 8- பருத்தி நூல் விலையைக் கட்டுப்படுத்தவும், பருத்தி ஆடைகள் உற்பத்தியை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மக்கள வை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. நாடாளுமன்ற நடத்தை விதிகள் 377ஆவது பிரிவின் கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்ச னைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:
இந்திய பொருளாதாரத்திற்கு லட்சக்கணக்கான டாலர்களை ஈட்டித் தருவதும், பல லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அளிப்பதுமான, தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதித்துக் கொண்டிருக்கும் மிக முக்கியமான நெருக்கடியை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த தொழிலானது அடிக்கடியான இடைவெளிகளில் ஏற்படும் பருத்தி நூல் விலை உயர்வி னை எதிர்கொள்ளும் கடுமையான சவாலை சந்திக்கிறது. இது தவிர, உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் உள்ள விசைத்தறி, கைத்தறி நிறுவனங்களும் கடுமை யான நெருக்கடியில் தள்ளாடுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் நகரம், பின்னலாடை மற்றும் பருத்தி ஆடைகள் தொழிலுக்கு அனைவரா லும் நன்கு அறியப்பட்டுள்ளதோடு பருத்தி ஆடைகளை உலகெங்கிலும் ஏற்றுமதி செய்து, டாலர்களில் வரு மானத்தை ஈட்டித் தரும் நகரமாகும்.
கடந்த 2 வருடங்களாக மாதந்தோறும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என ஏற்படும் பருத்தி நூல் விலை உயர்வு, அதிகமாக உயரும் போக்குவரத்து செலவுகள், பின்ன லாடை மற்றும் பருத்தி ஆடைகளை சாயம் தோய்க்க உபயோகப்படுத்தும் ரசாயனப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தத் தொழில் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்த விலை உயர்வுகளுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, சந்தையில் பருத்தி கிடைப்பதில் ஏற்படும் பற்றாக்குறையே ஆகும். பருத்தி சந்தைகள், பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சந்தை சக்திகளால் கட்டுப்படுத்தப்படு கின்றன. அடிக்கடி அதிகரிக்கும் பருத்தி நூல் விலை உயர்வுக்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இத்துடன் உற்பத்தி நடவடிக்கைகளில் காணப் படும் பல்வேறு விலை உயர்வுகளும் காரணங்களாகும்.
ஜிஎஸ்டி வரி அதிகளவில் உயர்வு
சந்தை சுருக்கம், பொது முடக்கம் போன்ற பிரச்சனைகளோடு ஜிஎஸ்டி வரி அதீதமான முறையில் உயர்த்தி யிருப்பதன் காரணமாகவும் இந்தத் தொழில்கள் கடுமையான நெருக்கடி களை சந்தித்து வருகின்றன. பின்னலாடை - உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள 5.63 லட்சத்திற்கும் அதிகமான விசைத்தறி, கைத்தறி நிறுவனங்களும் உற்பத்தி குறைப்பு மற்றும் மூடப்படும் நிலையில் உள்ளன. வேலைவாய்ப்பு அளிப்பதில் பின்னலாடைத் தொழில் என்பது விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய தொழிலாகும். பருத்தி நூல் விலை உயர்வானது இந்தத் தொழில்களையும் பொரு ளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பாதிப்பதோடு அல்லாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.
இப்பிரச்சனையை அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டுவந்த போதும், அது கண்டு கொள்ளாததன் காரணமாக, இன்றைய தினம் பருத்தி நூல் விலை உயர்வினைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. எனவே, பருத்தி நூல் விலையைக் கட்டுப்படுத்தவும், பருத்தி ஆடைகள் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில் சார்பு மற்றும் தொழிலாளர் சார்பு, தொழில் கொள்கைகளைக் கைக்கொள்ளுமாறு இந்த அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க வும், தொழிலாளர்களது வாழ்வா தாரங்களைப் பாதுகாக்கவும் தற்போ தைய அவசர தேவையான விலைக் கண்காணிப்பு முறையை நிறுவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.
(ந.நி.)