tamilnadu

img

குற்றவாளிகளுக்கு சாதகமாகச் செயல்படும் காவல்ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 18- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட அரியமங்கலம் பகுதி அம்மாகுளம் கிளைச்  செயலாளர் தவ்பிக் (24). இவர்  போதை இல்லா கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் கஞ்சா பயன்படுத்தும் சிறுவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறிவந்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த  சமூக விரோதிகள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தவ்பிக்கை  தலை,  முதுகு, கை என பத்து  இடங்களில் கொடூரமாக வெட்டியுள்ள னர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய தவ்பிக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. இந்த கொலைமுயற்சிக்கு மூளையாகச் செயல்பட்ட பாஜகவைச் சேர்ந்த வினோத், பாதுஷா உள்ளிட்ட  அனைத்து குற்றவாளிகள் மீதும்  கொலை  முயற்சி வழக்கு பதிவு செய்து, குண்டர்  தடுப்பு  சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து பொன்மலை வட்ட காவல் உதவி ஆணையர் காம ராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் குற்றவாளிகளில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  மற்ற  குற்றவாளிகளை விரைவில் கைது  செய்து, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என  அவர் உறுதியளித்தார்.

காவல் ஆய்வாளரின் திசை திருப்பல்

இந்நிலையில் அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவானந்தம், தவ்பிக் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள்  மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு  செய்யாமல்  கட்டை, கல்லால் தாக்குதல், கூரிய ஆயுதத்தால் காயம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.  இச்சம்பவம் குறித்து ஒரு பத்திரிகை யாளர், காவல் ஆய்வாளர் திரு வானந்தத்திடம் கேட்ட போது அதற்கு அவர், “வாலிபர் சங்க மாவட்டப் பொரு ளாளர் நவநீதகிருஷ்ணன் ரௌடிக் கும்பலுடன் தொடர்பில் உள்ளார். இவரது கும்பலுக்கும் மற்ற ரவுடி கும்பலுக்கும்  இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் இது. இதைத் திசை  திருப்ப கஞ்சா வியாபாரம் நடப்பதாக  குறை கூறுகின்றனர். மேலும் இச்சம் பவத்திற்கு மூளையாக செயல்பட்ட வினோத் குற்றச்செயல்களில் ஈடுபடுவ தில்லை என பொய்யான தகவலை அளித்து வாலிபர் சங்கத்திற்கும், சங்க நிர்வாகிகளின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்துள்ளார். 

முற்றுகையிட முயற்சி

காவல் ஆய்வாளர் திருவானந்தத் தின் செயலைக் கண்டித்தும், குற்றவாளி களுக்கு ஆதரவாகச் செயல்படும்  திரு வானந்தத்தை இடமாற்றம் செய்து அவர்  மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட வினோத் உள்ளிட்டோரை உடனடி யாகக் கைது செய்ய வேண்டும். குற்ற வாளிகள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வாலிபர் சங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறியதற்கு மறுப்பு தெரிவிக்க வலி யுறுத்தி  வாலிபர், மாணவர், மாதர் சங்கங்கள் ஞாயிறு அன்று காலை அரியமங்கலம் காவல்நிலையத்தை முற்றுகையிடத் திரண்டனர்.  இதைத் தொடர்ந்து பொன்மலை வட்ட உதவி ஆணையர் காமராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் குற்றவாளிகள் மீது போடப்பட்டிருந்த வழக்கு சனிக்கிழமை இரவு கொலை முயற்சி வழக்காக மாற்றிப் பதிவு  செய்யப்பட்டு விட்டது. அரியமங்கலம்  காவல் ஆய்வாளர் திருவானந்தம் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணை யருக்கு பரிந்துரைத்துள்ளதாகக் கூறினார். இதனையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டு குற்றவாளி களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் திருவானந்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டச்  செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச் செல்வன், கார்த்திகேயன்,  மாவட்டக் குழு உறுப்பினர் மாறன், வாலிபர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் பாலா, மாணவர்  சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன், மாதர்சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, 35-ஆவது வார்டு  மாமன்ற உறுப்பினர் சுரேஷ், பகுதிச் செயலாளர்கள் மணிமாறன், தர்மா, மாதர்சங்க மாநகர் தலைவர் பொன்மகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கே.பாலபாரதி

முன்னதாக சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவ்பிக்-ஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் பி.பூமயில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், லெனின், மாணவர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன் ஆகியோர்  சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவர்களிடம் தவ்பிக் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். 

மயிலாடுதுறை

தவ்பிக்  மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர்,  பெரம்பூர், ஆக்கூர் ஆகிய  இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருக்கடையூரில் ஒன்றிய செயலாளர் பவுல் சத்யராஜ், பெரம்பூரில் ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், ஆக்கூரில் ஒன்றியச் செயலாளர் சபீர் அகமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஐயப்பன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தி, மாவட்ட நிர்வாகிகள் அனிஷ் ரஹ்மான், கபிலன் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்டத் தலைவர் மணிபாரதி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.