முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை சென்னை, ஏப். 14 - அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை! பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது! நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது! சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்!” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.