புதுதில்லி, நவ. 23 - ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. ஜார்க்கண்ட்டில் இந்தமுறை பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பொய்யாக்கி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகவும், மகாராஷ்டிர சட்டப்பேர வைக்கு நவம்பர் 20 அன்று ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட்டில் 81 தொகுதிகளில், 2.60 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், இங்கு இரண்டு கட்டங்களிலும் மொத்தமாக 67.74 சதவிகித வாக்குகளும், மகாராஷ்டிரா வில் 288 தொகுதிகளில், 9.70 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த நிலையில், 66.05 சதவிகித வாக்குகளும் பதிவாகி இருந்தன. மகாராஷ்டிர தேர்தல் வெற்றி பாஜக வுக்கு கவுரவப் பிரச்சனையாக மாறிய தால், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி யிறைத்தது.
அதிகாரத் துஷ்பிரயோகத்தி லும் ஈடுபட்டது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக் கிழமையன்று (நவ.23) நடைபெற்றது. ஜார்க்கண்ட் இதில், ஜார்க்கண்ட்டில், ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா தலைமை யிலான இந்தியா கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை உடைத்தும், மத மற்றும் இனவெறியைத் தூண்டியும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மேற் கொண்ட வெறுப்பு பிரச்சாரத்தை முறி யடித்து, மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 50 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இவை தவிர, லாலு பிரசாத்தின் ராஷ்ட்டிரிய ஜனதாதளம் 4 இடங்களை யும், சிபிஐ(எம்-எல்)லிபரேசன் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பாஜக அணியைப் பொறுத்தவரை, பாஜக மட்டும் 21 இடங்களிலும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 1, ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிரந்திகரி மோர்ச்சா 1 இடத்திலும் வென்றுள்ளன. இதன்மூலம் ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் மீண்டும் இந்தியா கூட்ட ணியே ஆட்சியமைக்க உள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில், பல்வேறு தில்லுமுல்லு-களை அரங்கேற்றிய பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஒருவழியாக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இங்கு மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக மட்டும் 132 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கூட்ட ணியிலுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களையும், அஜித்பவார் தலை மையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களை யும் பெற்றுள்ளன. கூட்டணியாக மொத்தம் 230 இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. மகா விகாஸ் அகாதி கூட்டணியைப் பொறுத்த வரை, காங்கிரஸ் 16, உத்தவ் தாக்கரே தலைமை யிலான சிவசேனா 20, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 10, சமாஜ்வாதி கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 என மொத்தம் 53 இடங்களையே பெற முடிந்துள்ளது.
இடைத்தேர்தல்
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தலோடு சேர்த்து, 13 மாநிலங்களில்- உத்தரப்பிரதேசம் (9 தொகுதிகள்), ராஜஸ்தான் (7), மேற்கு வங்கம் (6), அசாம் (5), பஞ்சாப் (4), பீகார் (4), கர்நாடகா (3), கேரளா (2), மத்தியப் பிரதேசம் (2), சிக்கிம் (2), சத்தீஸ்கர், குஜராத், உத்தரகண்ட், மேகாலயாவில் தலா 1 என - காலியாக இருந்த 48 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா வின் நான்டெட் மற்றும் கேரளத்தின் வயநாடு ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில், நான்டெட் தொகுதியில் பாஜகவும், வய நாட்டில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. வய நாட்டில் ஏற்கெனவே ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்த நிலையில், அவர் ராஜினாமா செய்த இடத்தில் தற்போது ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார். பஞ்சாப்பில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 3 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியை யும் கைப்பற்றியுள்ளன. மேற்குவங்கத்தில் 6 தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கேரளத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பாலக்காடு தொகுதியில் காங்கிரசும், செலக்கரா தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றன. அசாமில் பாஜக 3, தேசிய மக்கள் கட்சி, அசாம் கணபரிஷத் தலா 1 என வெற்றியைப் பெற்றுள் ளன. பீகாரில் 4 தொகுதிகளையுமே பாஜக கூட்டணி வென்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 9 தொகுதிகளில் 6 தொகுதிகளில் பாஜகவும், சமாஜ்வாதி கட்சி 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக்தளம் 1 என வெற்றி பெற்றுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளில், காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தலா 1 இடத்தை பங்கிட்டுக் கொண்டுள்ளனர். சத்தீஸ்கர், உத்தரகண்ட், குஜராத் மாநிலங்களில் தலா 1 இடத்திற்கு தேர்தல் நடை பெற்ற நிலையில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேகா லயாவில் தேசிய மக்கள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. சிக்கிமில் 2 தொகுதிகளிலும் மாநிலக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோச்சா வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் 7 தொகுதிகளில் பாஜக 6, காங்கிரஸ் 1, பாரத் ஆதிவாசி கட்சி 1 என இடங்களைப் பெற்றுள்ளன.
செலக்கராவில் சிபிஎம் வேட்பாளர் யு.ஆர்.பிரதீப் வெற்றி
கேரள மாநிலம் செலக்கரா சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த கே. ராதாகிருஷ்ணன், ஆலத்தூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதைத் தொடர்த்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக யு.ஆர். பிரதீப், காங்கிரஸ் சார்பில் ரம்யா ஹரிதாஸ், பாஜக சார்பில் பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் யு.ஆர். பிரதீப், 64 ஆயிரத்து 827 வாக்குகளைப் பெற்று, தன்னை அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளரை 12 ஆயிரத்து 201 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இங்கு பாஜக வேட்பாளர் பாலகிருஷ்ணன் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டார்.