tamilnadu

இரு மொழி என்பது தமிழகத்தின் கொள்கை முடிவு

சென்னை,ஜன.25-  இரு மொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின்  கொள்கை முடிவு.  இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்த உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ( பொறுப்பு) முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு நடைபெற்றது.அப்போது, எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை  மாநில அரசு முடிவெடுக்கலாம் என்ற போதும்,

இந்தி படிக்கும் வாய்ப்பு இல்லாமல் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலும், வேறு மாநிலங்களில் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் மக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது எனவும், கர்நாடகா, ஆந்திராவிலும் மும்மொழி கொள்கை பின்பற்றுவதால், கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதிலளிக்கையில், இந்தி படிப்பதை யாரும்  தடுக்கவில்லை.  தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை  முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.