புதுதில்லி, ஆக. 4 - ரயில்வேத் துறையில் 2,680 கெஜடட் பதிவு பெற்றவர்களுக்கான பணியிடங்களும், 2 லட்சத்து 61 ஆயிரத்து 233 கெஜட் அல்லாதவர்கள் பணியிடங்களும் காலியாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பி.ஆர். நடராஜன், ரயில்வேத் துறையில் 18 மண்டலங்களிலும் காலியாகவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை எவ்வளவு என்றும், அவற்றை நிரப்பிட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் கேட்டிருந்தார். மேலும், காலிப்பணியிடங்களை நிரப்ப இயலாதது, பணியாளர்கள் அதிக நேரம், அதாவது 16 மணி நேரம் வரையிலும் ஓய்வும் உணவும் இன்றி நீடித்து பணி செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதா என்றும், அப்படியெனில், அதன் விவரங்கள் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் ஒப்பந்த ஊழியர்கள் நியமனங்கள் குறித்த விவரங்களும் கேட்டிருந்தார்.
இவற்றுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதில்கள் வருமாறு: “ரயில்வேத்துறையில் மொத்தம் உள்ள 18 மண்டலங்களிலும் 2023 ஜூலை 1 தேதியில், கெஜட் பதிவு பெற்ற அதிகாரிகளின் பணியிடங்கள் 2,680, கெஜட் பதிவு பெறாத ஊழியர்களின் பணியடங்கள் 2,61,233 பணியிடங்களும் காலியாக இருக்கின்றன என்று குறிப்பிட்டார். (இதில் தென்னக ரயில்வேயில் கெஜட் பதிவு பெற்ற அதிகாரிகள் பணியிடங்கள் 121-ம், கெஜட் பதிவுபெற ஊழியர்கள் பணியிடங்கள் 15,240 ஆகும்.). மேலும், செயல்பாட்டு பாதுகாப்புப்பிரிவில் 53,178 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதன் அளவு, இடம் சார்ந்த விநியோகம் மற்றும் செயல்பாட்டின் விமர்சனம் போன்றவைகளை கருத்தில் கொண்டு நிகழ்வு மற்றும் காலிப்பணியிடம் பூர்த்தி செய்தல் என்பது இந்திய இரயில்வேத் துறையின் ஒரு தொடர்ந்த நடைமுறையாகும். காலிப்பணியிடம் நிரப்புதல் செயல்பாட்டின் தேவைகளின்படி நியமன ஏஜென்சிகளுடன் சேர்ந்து வேலை வாய்ப்பு கோரிக்கைகளை முதன்மையாக கொண்டு இரயில்வேத் துறையால் செய்யப்படுகிறது. ஏறத்தாழ 2.37 கோடி தேர்வாளர்களுக்கு, கணினி அடிப்படையிலான சோதனை நடத்தப்பட்டு 1,39,050 தேர்வாளர்களை பட்டியலிடப்படுவதற்காக ஒரு மிகச் சிறந்த ஆட்சேர்ப்பு முகாம் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நுட்பம் அல்லாத பிரிவு ஊழியர்களுக்காக, 2019 ஜனவரிக்கான மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, கணினி அடிப்படையிலான சோதனை 1.26 கோடி தேர்வாளர்களுக்கு, 133 ஷிஃப்ட்களில், 68 நாட்களில், 211 நகரங்களில் 726 மையங்களில் 15 மொழிகளில் நடத்தப்பட்டது. இது போலவே ஊநுசூ -சுசுஊ 01/2019 (லெவல் 1) க்கான கணினி அடிப்படையிலான சோதனை 1.1 கோடி தேர்வர்களுக்கு, 99 ஷிஃப்ட்களில், 33 நாட்களில், 191 நகரங்களில், 551 மையங்களில், 15 மொழிகளில் நடத்தப்பட்டது.
லெவல் 1 உட்பட, பல்வேறு குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான 1,36,773 தேர்வர்கள் 01-04-2022 லிருந்து 30-06-2023 வரையிலான காலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்கள். இதில் 1,11,728 பாதுகாப்புப் பிரிவு பணியிடங்களும் அடங்கும். திருவனந்தபுரம் கோட்டம் மற்றும் எர்ணாகுளத்தில் அமைந்துள்ள யூனிட்டுகள்/அலுவலகங்கள் உள்ளிட்ட தெற்கு ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் உள்ள குரூப் ‘சி’ பிரிவுக்கான (லெவல் 1 நீங்கலாக) 3,361 தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளார்கள். தெற்கு ரயில்வேயில் உள்ள லெவல் 1 பணிக்கு 8,514 தேர்வர்கள் நியமனத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ளார்கள். ஓய்வின்றி உழைப்பது கவனத்திற்கு வரவில்லையாம் பதவி உயர்வு அல்லது நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்கள் ஒழுங்கான முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றன. பணியாளர்கள் 16 மணி நேரம் வரையிலும் இடைவெளியின்றி ஓய்வு மற்றும் உணவு இல்லாமல் பணியாற்றுகிறார்கள் என்ற நிகழ்வு கவனத்திற்கு வரவில்லை. அடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வே துறையில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு: (இந்தப் பட்டியலிலி 18 மண்டலங்களுக்கும் 2018, 2019, 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலை அமைச்சர் அளித்துள்ளார். இதில் தென்னக ரயில்வேயில் 2018ஆம் ஆண்டில் 160 பேர், 2019ஆம் ஆண்டில் 328 பேர், 2020ஆம் ஆண்டில் 521 பேர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.) இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார். (ந.நி.)