சென்னை,பிப்.16- தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாண வர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட போதும், கல்லூரிகள் 7 லட்சத்து 50 ஆயிரம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், எந்த கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற எந்த அடிப்படை தகவலும் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர் கள் பொதுநல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், பொதுநல வழக்கு அதிகார வரம்பு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்புக்கு அதிருப்தி தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அத்தொகையை 15 நாட்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வுக்கு செலுத்த உத்தரவிட்டனர்.