tamilnadu

img

மதவெறி ஆதிக்கத்தை செங்கொடி இயக்கம் வீழ்த்தும்

கண்ணூர் பொதுக்கூட்டத்தில்  சீத்தாராம் யெச்சூரி முழக்கம்

ஏ.கே.ஜி.நகர் (கண்ணூர்), ஏப்.12- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடுகள் என்றும், கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு முக்கியமான பிரகடனத்தை வெளியிட்டு சிறப்பு பெற்றுள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மாநாட்டின் நிறைவு பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: இன்று ஆட்சியில் இருக்கும் மதவெறி சக்திகளுக்கு எதிராக கட்சியின் அகில இந்திய மாநாடு வலுவான மற்றும் தெளிவான பிரகடனத்தை செய்துள்ளது. இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சி நிரலை நாட்டில் செயல்படுத்த பாஜக அரசு முயற்சிக்கிறது. புதிய தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதைத் துரிதப்படுத்துவது போல் இந்த நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டின் செல்வம் சூறையாடப்படுகிறது.

தனியார்மயமாக்கலுக்கு ஏற்றவாறு பொதுத்துறைகள் நலிவடையச் செய்யப்படுகின்றன. கார்ப்பரேட் சக்திகளுக்கும் வகுப்புவாத சக்திகளுக்கும் இடையிலான புனிதமற்ற கூட்டணி நாட்டின் அனைத்துத் துறைகளையும் கட்டுப்படுத்துகிறது. கூட்டுக் களவாணி முதலாளித்துவம் வலுவடைந்துள்ளது. அரசியல் ரீதியான ஊழல் பரவலாக்கப்படுகிறது. சர்வாதிகாரப் போக்குகளின் பிரதிபலிப்பாக அரசு மாறிவிட்டது. இது ஜனநாயக உரிமைகளை அழிக்கிறது. மனித உரிமைகளை நசுக்குகிறது. நாட்டின் இத்தகைய நிலைமைகளை 23ஆவது மாநாடு நன்கு உணர்ந்து கொண்டு, இந்த சவால்களை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளது. செங்கொடி இயக்கம் பாசிச மதவெறி ஆதிக்கத்தை முறியடிக்கும். 23 ஆவது மாநாடு நடந்த கண்ணூர் மண், புரட்சித் தியாகிகளின் அழியாத மாபெரும் வரலாற்றின் பூமி. இது கையூர் மண். மாபெரும் தியாகிகளின் தியாக வரலாற்றைக் கொண்ட மண். 23 ஆவது கட்சி மாநாட்டின் அனைத்து முடிவுகளும் ஒருமனதாக இருந்தன. இது கட்சியின் பலத்தை பிரதிபலிக்கிறது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

லட்சக்கணக்கான மக்களால் கண்ணூர் நிரம்பியது

சிபிஎம் மாநாடும்  வியந்துபோன  ஊடகங்களும்

கண்ணூர், ஏப்.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டின் நிறைவுப் பொதுக்கூட்டத்தைக் காண ஏப்ரல் 10 அன்று லட்சக்கணக்கானோர் கண்ணூர் நகரில் குவிந்தனர். கண்ணூர் நகரம் அளவு கடந்த மக்கள் கூட்டத்தைக் கண்டது. முழக்கங்கள், புரட்சிகர பாடல்களுடன் ஊழியர்களின் உற்சாகம் நகர வீதிகளை நிரப்பியது. ஞாயிறன்று காலை முதலே நகரில் கூட்டம் அலைமோதியது. கேரளத்தில் கட்சியின் பிறப்பிடத்தில் முதன்முறையாக நடைபெற்ற மாநாட்டின் வரலாற்றுத் தருணத்தைக் காண, சனிக்கிழமை முதல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கண்ணூரில் குவிந்தனர். கே.வரதராஜன் நகரில் நடந்த வரலாறு-ஓவியம்-சிற்பக் கண்காட்சி, நிருபம்சென் நகர் புத்தகத் திருவிழாவிற்குள் நுழைய மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். நகரமே ஊழியர்களால் நிரம்பி வழிந்தது.

நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், ஜவஹர் ஸ்டேடியத்தில் உள்ள ஏ.கே.ஜி.நகர் வரை, முழக்கங்களை எழுப்பியவாறு, வாகன நிறுத்துமிடத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் செங்கொடி காட்டி வரவேற்றனர். பொதுக்கூட்டம் நடைபெறும் ஏ.கே.ஜி.நகர் முதல் நாளிலேயே கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கானோர் மைதானத்திற்குள் நுழைய முடியாமல் வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கட்சி மாநாடு நடைபெற்ற பர்ணச்சேரியில் உள்ள இ.கே.நாயனார் அகாடமியில் இருந்து, பொதுக்கூட்டம் நடக்கும் இடமான ஜவஹர் திடலில், ஏ.கே.ஜி.நகருக்கு செந்தொண்டர்கள் உற்சாகமாக அணிவகுத்துச் சென்றதை, பல்லாயிரக்கணக்கான மக்கள், சாலையில் அணிவகுத்து நின்று முழக்கமிட்டு வரவேற்றனர். செம்படை அணிவகுப்பைக் காணவும், தலைவர்களை வரவேற்கவும் ஆயிரக்கணக்கானோர் சாலையோரம் காத்திருந்தனர். சாலையின் இருபுறமும் மனிதச் சுவராக காட்சியளித்தது. கூட்ட நெரிசலால் செம்படை அணிவகுப்பும், தலைவர்களை ஏற்றிச் சென்ற திறந்த வாகனங்களும் செல்ல நீண்ட நேரம் ஆனது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான செய்திகளையே தினமும் எழுதிக்குவிக்கும் மலையாள மனோரமா உள்ளிட்ட நாளிதழ்கள் மாநாடு குறித்து வெளியிட்ட தலைப்புகள் இவை: “வலுவைக் காட்டிய சிவப்பு பேரணி, பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர்;” “செங்கடலாக கண்ணூர். ஏ.கே.ஜி.நகர் மக்கள் கடலாக காட்சியளித்தது.”