திரைப்படத்தின் கரு உருவாக காரணமாக இருந்த இயக்கம் நடத்தும் பாராட்டு விழா மகிழ்ச்சியளிக்கிறது. கலை மக்களுக்காகத்தான் என்பதை இடதுசாரி இயக்கத்தின் படைப்பாளிகள், சிந்தனையாளர்களின் படைப்புகள் உணர வைத்தன. ஒரு கட்சியின் பிரதிநிதியாக இருந்து, ஒரு தத்துவத்தை முன்னிறுத்த, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போராட்டத்தை படமாக்க வேண்டும் என்றெல்லாம் கதை எழுதவில்லை. அது என்னுடைய நோக்கமும் அல்ல. ஆனால், இடதுசாரி இயக்கத்திற்கு அதைவிட சிறப்பு என்னவென்றால், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனையை எழுதும்போது அங்கே இடதுசாரி இயக்கம்; சிந்தனையாளர்கள்; படைப்பாளிகள் வந்து நிற்கிறார்கள்.
கட்சி அரசியல் என்பது ஓட்டோடு நேரடி தொடர்புடையது. யார் வாக்களிக்கிறார்களோ அவர்களுக்காகப் பேசுவது எல்லா கட்சிகளும் செய்யக் கூடியது. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுரிமை இல்லாத மக்களின் பிரச்சனைகளை தோளில் ஏந்திப் போராடுகிற இயக்கத்தை, அதன் பங்களிப்பைப் பதிவு செய்யக் கிடைத்த வாய்ப்புக்காக மகிழ்ச்சி அடைகிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக படத்தை பதிவு செய்துள்ளோம். ஒரு ராஜாகண்ணு, ஒரு பார்வதி என்று சுருக்கி கதையை எழுதவில்லை. 60 இருளர் கிராமத்தை ஆய்வு செய்தேன். ஒவ்வொரு கிராமத்திலும் ராஜாகண்ணுக்கள் இருக்கிறார்கள். எட்டாத பல கிராமங்கள் உள்ளன. போக வேண்டிய தூரம் நீளமாக இருக்கிறது. நாம் சென்றடைய வேண்டிய மக்கள் அதிகமாக உள்ளனர். போராட்டங்கள் ஒருவரை நோக்கி சுருங்குவதில்லை; ஒருவரிடமிருந்து தொடங்கலாம். அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு எதிரான முழக்கமாக ஜெய்பீம் -ஐ உணர்ந்தேன். எனவே, அந்த பெயரை வைத்தேன்.
காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படங்கள் திரைப்படத்தில் இருக்கும். சிவப்பு, நீலம், கருப்பு இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தியாவை மீட்க முடியும். நல்ல நிலைக்கு மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான சிறுபுள்ளியாக இந்த படம் உள்ளது. படத்தில் உண்மையை முழுமையாக பேசவில்லை. நாம் பேசிய உண்மைகள் அவர்களின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறது. உண்மையை புதைக்கலாம், விதையை போன்று முளைத்து அது வெளியே வரும். அப்படியான முயற்சிதான் இந்தப்படம். கம்யூனிச இயக்கம் செய்த பங்களிப்பை எந்த இடத்திலும் குறைவாக பதிவு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
நீதிமன்றத்தில் வழக்கு ஒரு இடத்தில் சிறிது தடுமாறும். அப்போது, “கோர்ட்டில் நீதி கிடைக்கவில்லை என்றால், ரோட்டில் இறங்கி போராடுவோம்” என்ற வசனம் கம்யூனிஸ்ட், செயற்பாட்டாளர்களுடையதுதான். சட்டப்போராட்டமும் களப்போராட்டமும் இணைபிரியாத சங்கிலி. ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வெற்றி கிடைக்கும். இந்தப் போராட்டம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போன்றதுதான். கடலூரில் 1993-1996 காலக்கட்டத்தில் மட்டும் இதுபோன்ற 12 வழக்குகளில் இடதுசாரிகளின் பங்களிப்பு உள்ளது. இவை அனைத்தையும் ஒரே கதைக்குள் கொண்டு வர முடியாது. எந்தளவுக்கு நேர்மையாக பதிவு செய்ய முடியுமோ அந்தளவிற்கு பதிவு செய்துள்ளோம். இந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்ததோடு, சூர்யாவே நடித்ததும் படம் வெற்றியடைய முக்கிய காரணமாக அமைந்தது. கூட்டுமுயற்சியானது களத்திலிருந்து கதையை நோக்கி படம் நகர்ந்துள்ளது.