ஆராதனா ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி. அவளுக்குப் பிடித்த இடம் புளியம் தோப்பு தான்! அவளது வீட்டுக்கு அருகில் புளியந்தோப்பு இருந்தது. அந்த தோப்பில் பத்து புளிய மரங்கள் இருந்தன. அதுவும் பெரிய பெரிய மரங்கள். அவள் புளிய இலைகளை பறித்துச் சாப்பிடுவாள். இலையின் புளிப்புச் சுவையில் வாய் கோணல் ஆகும். அது அவளுக்குப் பிடிக்கும்.
ஒரு நாள் அவளும் தோழிகளும் சேர்ந்து புளியந்தோப்புக்குச் சென்றனர். அவர்கள் ஓடிப் பிடித்து விளையாடினர். விளையாடும் போது ஆராதனா கீழே விழுந்துவிட்டாள். அவள் தோழிகள் அவளைப் பார்த்துச் சிரித்தனர். அவள் அழுது கொண்டே வீட்டுக்குப் போனாள்.
அவளைப் பார்த்த அம்மா, உனக்கு என்ன ஆச்சு எதுக்காக அழுகுறே என்று கேட்டார். அதற்கு அவள் அழுது கொண்டு சொன்னாள், “ நான் விளையாடும் போது கீழே விழுந்து விட்டேன். அதைப் பார்த்து என் நண்பர்கள் சிரித்தார்கள்.”
அதற்கு அம்மா சொன்னார், “ இன்னும் உனக்கு நிறைய காலம் இருக்கிறது. இதற்கே இப்படி என்றால்...? வாழ்க்கையில் பலர் வருவார்கள். சிலர் நட்புடன் பழகுவர். சிலர் கோபப்படுத்துவர். சிலர் எதிரியாக மாறுவார்கள். சிலர் சிரிப்பார்கள். சிலர் தூக்கி விடுவார்கள். சிலர் விலகி நிற்பர். சிலர் வேடிக்கை பார்ப்பார்கள்.”
“ சரி,அம்மா ! இனிமேல் கீழே விழுந்தாலும் அழுக மாட்டேன். “ என்றாள்.
அதன்பின், ஆராதனா கீழே விழுந்தாள். நண்பர்கள் சிரித்தார்கள். அவளும் சிரித்துக் கொண்டே எழுந்தாள். அவள் அழவே இல்லை.