ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டையில் எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்பு
புதுக்கோட்டை, மே 2- பள்ளிகளைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். விஜயலெட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநிலப் பொருளாளர் எஸ். தேவமணி, மாவட்டச் செயலாளர் ஏசி. செல்வி, பொருளாளர் எஸ்.சவரியம்மாள், மாநில செயற்குழு உறுப்பினர் கேஎம்.ரேவதி மற்றும் நிர்வாகிகள் முத்துலெட்சுமி, அருமையம்மாள், மாரியம்மாள், ஜெயலலிதா, செபஸ்தியம்மாள், லதா உள்ளிட்டோர் பேசினர். போராட்டக் காலத்திற்கு நேரடியாக வருகைதந்து கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ரெத்தினவேல், முகமது கனி உள்ளிட்டோர் பேசினர். பள்ளிகளுக்கு வழங்குவதைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை வழங்க வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரியலூர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம். இளங்கோவன் வாழ்த்திப் பேசினார். இதில், சிஐடி மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் ஆர்.சிற்றம்பலம் அரியலூர் ஒன்றியச் செயலாளர் அ.அருண்பாண்டியன், ஓய்வு பெற்ற அமைப்பின் தலைவர் எம். சந்தானம் மற்றும் மாவட்டத் தலைவர் ராஜாமணி, மாவட்ட செயலாளர் சகுந்தலா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கால வரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக ரூ.12,000 மாதம்தோறும் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் ராணி தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர் சித்ரா, மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி, மாவட்டத் துணைத் தலைவர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் விளக்க உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், வட்டக் கிளை நிர்வாகிகள், ஊழியர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.