tamilnadu

img

ஊடக அறத்தின் உதாரணம் தோழர் எஸ். துரைராஜ் - க.சுவாமிநாதன்

ஊடக உலகம் மிகச் சிறந்த பத்திரிகையாளரை இழந்துள்ளது. அவரின் எழுத்துக்கள் நேர்மை யாக, பாரபட்சம் இன்றி மக்களின் பாடுகளை முன் வைத்தவை. பத்திரிக்கையாளர் துரைராஜ் 70 வயதில் மறைவெய்தியுள்ளார். 40 ஆண்டு காலம் அவர் ஊடக உலகில் பதித்துள்ள தடங்கள் முக்கியமானவை. 

நாற்பது ஆண்டு பயணம்

அவரின் ஊடகப் பணி இந்து (ஆங்கிலம்), பிரண்ட் லைன் இதழ்களில் 25 ஆண்டு காலம் இருந்துள்ளது. பி.டி.ஐ, சென்ட்ரல் நியூஸ் சர்வீஸ், பேட்ரியாட் ஆங்கில நாளிதழ், லிங்க் ஆங்கில வார இதழ், நியூஸ் டுடே ஆங்கில மாத இதழ் என மொத்தம் 40 ஆண்டுகள் ஊடக உலகைச் சுற்றி வந்துள்ளார். பிரண்ட் லைன் இதழின் துணை ஆசிரியராக பணி ஓய்வு பெற்றார்.  மெலிந்த தேகம், தோள் பையுடன் தமிழ்நாடு முழுக்க அவர் சேகரித்த செய்திகள் வெறும் தொழில், வருமானம் சார்ந்தது மட்டு மல்ல. சமூக அக்கறை, மக்களின் மீதான அள வற்ற நேசம் கொண்டதாக இருந்தது. மெலிந்த தேகத்திற்குள் ஆவேசம் குடியிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் அவரைப் பற்றி பகிர்கையில்  “உழைப்பாளி மக்கள் போராட்டங்களில் செய்தியாளராக பங்கேற்கிற அவர், காவல் துறை அடக்குமுறையை பிரயோகிப்பதை கண்டால் களத்திற்குள் இறங்கி, கடுமையாக காவல் துறையிடம் மோதி சாடிய நிகழ்ச்சிகள் உண்டு” என்று கூறுவார். அவர் உருவாக்கும் செய்திகளில் தொழிலுக்குரிய நடுவு நிலைமை இருக்கும். உண்மையை எந்த சூழலிலும் சமரசம் செய்ய மாட்டார். இதனால் இயல்பாகவே அவர் இடது சாரிகளின் நண்பராக இருந்தார். இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் அவரது இதயத்திற்கு நெருக்கமாக இருந்தன. 

எளிய உருவம்... வலிய உள்ளம்

“பிரண்ட் லைனில்” பணியாற்றிய காலத்தில் நகர்ப்புறங்களில் சாதிய பாகுபாடுகளின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி விவாதிக்க என்னை அழைத்திருந்தார். “தி இந்து” அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன்.  வயது வித்தியாசம் நிறைய இருந்தாலும், என்னை விட பன் மடங்கு தகவல்களைக் கொண்டிருந்தாலும் என்னிடம் இருந்து மதுரையில் இது பற்றி நடத்திய கள ஆய்வு பற்றி அவருக்கு தேவையான சில தகவல்களைப் பெற அவர் என்னிடம் உரையாடிய விதம் என்னை சங்கடத்திற்கு ஆளாக்கியது.  அவரிடமே சொன்னேன். சிரித்துக் கொண்டே சொன்னார்.  “ஊடகத்தில் பணி புரிபவர்கள் சாகிற வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்”. அந்த வார்த்தைகள் எனக்கு இன்னும் மனதில் நீங்காமல் நிற்கிறது. பிறகு மதுரைக்கு  சென்று எஸ்.எம். பி காலனி, கோமஸ் பாளையம், கரும்பாலை, தண்டல் காரன்பட்டி, சுப்ரமணியபுரம், ஹீரா நகர், கிருதுமால் நதி ஆகிய அடித்தள மக்களின் வாழிடங்களுக்கு சென்று எழுதிய “மறைந்திருக்கும் பாகுபாடு” (Hidden Apartheid) கட்டுரை மிகச் சிறப்பானது. அவரின் பணியை சிலர் அர சியல் தூண்டுதலின் பேரில் தடுக்க முனைந்த போது அவர் காட்டிய உறுதி எளிய உரு வத்திற்குள் இருந்த அறச் சீற்றத்தின் வெளிப் பாடாக அமைந்தது என்பதை அவருடன் சென்றவர்கள் செய்த பகிர்வு. 

அது போல அவரின் “டெல்டா விவசாயி கள் பிரச்சனைகள்” பற்றிய கட்டுரைகள் வெறும் தகவல்களாக இல்லாமல் உழைப்பாளி மக்களின் போராட்ட பிரச்சார ஆயுதங்களாக மாறின என்பது விவசாய இயக்கம் சார்ந்தவர்களின் அனுபவம். அவரது “ Mines of Concern” டிசம்பர் 2012 பிரண்ட் லைன் கட்டுரை மன்னார் குடி பகுதியில் மீத்தேன்  திட்டம் ரத்தாவதற்கு கருத்தியல் ரீதியான காரணியாக அமைந்தது. மக்களின் போராட்டங்களுக்கு தார்மீக பலத்தையும் தந்தது. அந்த கட்டுரையை தொகுக்க நான்கு நாட்கள் டெல்டா பகுதியில் பயணம் செய்தார். தஞ்சை டெல்டா வறட்சி, அதனையொட்டி நிகழ்ந்த தற்கொலைகள் பற்றியும் அவரின் எழுத்துக்கள் முக்கியமானவை.  அவரின் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பிரசவம் மாதிரி  ஆழ்ந்த அக்கறையுடன் அமையும். எழுத்தின் மீதான  நம்பகத் தன்மையை விட்டுக் கொடுக்கும் எந்தவொரு பலவீனமும் தன்னை அண்ட விடாமல் கடைசி வரை உறுதியாக இருந்தார். 

பன்முக ஆற்றல்

அவரது கட்டுரைகள் பன்முகத் தன்மை வாய்ந்தவை. வாச்சாத்தி கொடுமை, ஸ்டெர்லைட் , திருப்பூர் தொழில் நெருக்கடி  தற்கொலைகள், டெல்டா மீத்தேன் பிரச்சினை, ஶ்ரீ பெரும்புதூர் தொழிலாளர் உரிமை பறிப்பு, மணல் கொள்ளை, கிரானைட் மோசடி, திட்டமிடப்படாத நகர மயத்தின் பாதிப்புகள், கிராமப்புற கட்டப் பஞ்சாயத்து, தீண்டாமை, தலித் கிறித்தவர் பாகுபாடு, பழங்குடி மக்கள் இன்னல்கள், முற்போக்கு இலக்கியம் என அவர் பயணித்த தளங்கள் ஏராளம். அவற்றை வாசிப்பவர்கள் புதிய வெளிச்சத்தை பெறுவார்கள் என்பதே அவரின்  சிறப்பு. எழுத்தின் நோக்கம் உண்மை சார்ந்ததாக அமையும் போது அது இயல்பாகவே அநீதிகளுக்கான எதிர் வினைகளாக மாறி விடும் என்ற ஆழ்ந்த புரிதலோடு இயங்கியவர்.  ஊடக அறம் பெரிதும் கேள்விக் குறியாகி யுள்ள இன்றைய சூழ்நிலையில் இவரது போன்றவர்களின் அரிய பங்களிப்பு சிறந்த முன்னுதாரணம் ஆகும்.  துரைராஜ் மறைந்து விட்டார். ஆனால் அவர் வளர்த்த ஊடக அறம் வாழும். அவர் பெயரைச் சொல்லும்.